மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரம்!
மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் இறங்கி இருக்கிறது. இதற்காக, அதிவேக ரயில்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் இறங்கி இருக்கிறது. இதற்காக, அதிவேக ரயில்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று சென்னை வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் அவர் புதிய ரயில் திட்டங்களை துவங்கி வைத்தார்.

இதன்பின்னர், இன்று சென்னையில் நடந்த மற்றொரு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு," நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விஷன் 2030 என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். அதன்படி, அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தேசித்துள்ளோம்.

மணிக்கு 350 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் ரயில்களை தயாரிக்கும் 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த நிறுவனங்களிடம் மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய ரயில்களை தயாரிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.

அதுபோன்ற அதிவேக ரயில்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கு அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் அதிவேக ரயில்களை இந்தியாவில் இயக்குவதற்கு இலக்கு வைத்துள்ளோம். அந்த ரயில்கள் மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்," என்று கூறினார்.

மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், சென்னையிலிருந்து சில மணிநேரங்களில் டெல்லியை அடைந்துவிடலாம். இதேபோன்று, நாட்டின் எந்தவொரு மூலையையும் சில மணிநேரங்களில் தரை வழி போக்குவரத்து மூலமாக சென்றுவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த தகவல் ரயில் பயணிகளின் ஆவலை அதிகரித்துள்ளது. மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் சமீபத்தில் துவங்கப்பட்டன. இந்த ரயில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ரயில்வே துறை இறங்கி இருக்கிறது. மேலும், மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்திற்கான வழித்தட கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்கும், அதனை உருவாக்கி வரும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் மத்திய அரசுடன் தீவிரமாக பேச்சு நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் எந்த மூலைக்கும் விரைவான தரைவழி போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் கட்டமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ளே கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications