ரயில் டிக்கெட் கேன்சல் செய்த 24 மணி நேரத்தில் ரிஃபண்ட் கிடைக்கும்! இன்னும் என்னலாம் செய்ய போறாங்க தெரியுமா?
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்யப்பட வேண்டிய திட்டங்களுக்காக தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள் தற்போது வரிசைப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் எல்லாம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியாக புதிய அரசு பதவி ஏற்ற உடன் ரயில்வே துறையில் வரப்போகும் மாற்றங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தற்போது இந்தியா முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வரிசையாக பல்வேறு கட்டங்களாக நடக்கும். வாக்குப்பதிவு முடிந்து ஜூன் மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஜூன் நான்காம் தேதியே அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற தகவல் நமக்கு கிடைத்துவிடும்.

ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு அரசு பதவி ஏற்ற உடன் முதல் 100 நாட்களில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிவிப்பார்கள். இப்படியாக புதிதாக அரசு பதவி ஏற்ற உடன் இந்தியாவில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிப்பதற்காக தற்போது ரயில்வே அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். அதன்படி புதிய அரசு பதவி ஏற்றவுடன் முதல் 100 நாளில் வெளியாக உள்ள திட்டங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி இந்திய ரயில்வேயில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி ரயில் யாத்திரி பீம யோஜனா இன்சூரன்ஸ் திட்டம் முதல் 100 நாரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் அரசு செலவில் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்கள் பின்னர் வெளியாகும்.

புதிய அரசு பதவியேற்ற உடன் இந்தியாவில் உள்ள மூன்று பகுதிகளை பொருளாதார காரிடாராக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளை மேம்படுத்த ரூபாய் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள தண்டவாளங்களை மேம்படுத்துதல், புதிய பாதைகள் அமைத்தல், பலப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக மிக முக்கியமாக இந்திய ரயில்வே மூலம் முன்பதிவு டிக்கெட் பதிவு செய்து கேன்சல் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் புதிய திட்டத்தையும் புதிய அரசு பதவி ஏற்ற 100 நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரீபண்ட் வருவதற்கு நீண்ட காலமாவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு இது ஒரு தீர்வாக அமையும்.

இது மட்டுமல்ல இந்திய ரயில்வே துறையில் மிக முக்கிய மாற்றமாக சூப்பர் ஆப் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரயில் டிக்கெட் புக்கிங், ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தனித்தனி ஆப் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரே ஆப்-ல் அனைத்து தகவல்களையும் பயணிகள் பெறும் வகையில் இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் பகுதிகளை இணைக்கும் வகையில் உலகின் உயரமான ரயில்வே பாலத்தையும் முதல் 100 நாளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பாலம் பெரும்பாலும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பிற்கு தயாராக இருக்கும் நிலையில் புதிய அரசு பதவி ஏற்ற 100 நாளில் இதன் திறப்பு விழாவை நடத்த இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முதல் தூக்கு ரயில்வே பாலமான ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலமும் புதிய அரசு பதவி ஏற்ற 100 நாளில் திறப்புக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பாலம் வழியாக ரயில் சென்று வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இது திறப்புக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோக புதிய அரசு பதவி ஏற்ற 100 நாட்களில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த ரயில்கள் கட்டி முடிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டம் நூறு நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அதற்கான முயற்சிகளை தற்போது ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தியாவில் மும்பை-ஆமதாபாத் பகுதிகளை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடந்து வருகிறது. புதிய அரசு பதிவேற்ற 100 நாட்களில் இந்த பணியை துரிதப்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் உள்ள 508 கிலோமீட்டரில் 320 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் துவக்கப்பட்டு வரும் 2029-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது தேர்தல் நடந்த புதிய அரசு பதவி ஏற்ற உடன் முதல் 100 நாட்களில் அனைத்து துறைகளும் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள். அதன்படி ரயில்வே நிர்வாகம் இந்த 100 நாள் திட்டங்களில் பல முக்கிய திட்டங்களை வைத்துள்ளது. பலர் எதிர்பார்க்கும் இந்த திட்டங்கள் எல்லாம் அறிமுகமானால் நிச்சயம் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









