புல்லட் ரயில் திட்டம்: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
ரயில் கட்டண உயர்வு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அடுத்த மாதம் 8ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புல்லட் ரயில் திட்டம் பல்வேறு பிரச்னைகளால் தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாக புல்லட் ரயில் திட்டமும் கருதப்படுகிறது. இதுதொடர்பாக, பிரதமர் மோடியை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்மூலம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இருவிதமான திட்டம்
அதிவேக ரயில் சேவைகளை இருவிதமாக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மணிக்கு 300 கிமீ வேகத்தில் இயக்குவதற்கான பிரத்யேக கட்டமைப்பு கொண்ட புல்லட் ரயில் திட்டம் ஒன்றாகவும், ஏற்கனவே இருக்கும் ரயில் வழித்தடங்களை மேம்படுத்தி ரயில்களின் வேகத்தை 150 கிமீ வரை உயர்த்துவதற்கான மற்றொரு திட்டமும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்
முதல் கட்டமாக மும்பை- புனே மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலிருந்து வர்த்தக தலைநகரான மும்பையை இணைக்கும் விதத்தில் மற்றொரு புல்லட் ரயில் திட்டமும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் சொந்த மாநிலமான கர்நாடகத்திலும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. பெங்களூர் வழியாக மைசூர்- சென்னை இடையிலான புல்லட் ரயில் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயண நேரம்
மும்பை-அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டால், இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரம் தற்போது இருக்கும் 8 மணி நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரமாக குறையும்.

அதிவேக ரயில் சேவை
புல்லட் ரயில் திட்டம் தவிர்த்து தற்போது இருக்கும் முக்கிய வழித்தடங்களை மேம்படுத்தி மணிக்கு 150 கிமீ முதல் 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆபத்துக்கள் நிறைந்த இடங்களில் தடுப்பு வேலி அமைத்தல், வளைவுகளில் தண்டவாளங்களை வலுப்படுத்துதல், சிக்னல் கட்டமைப்பை மேம்படுத்துதல் பணிகளை செய்யப்பட உள்ளது.

முதல் வழித்தடம்
டெல்லி- ஆக்ரா இடையிலான 200 கிமீ தூரத்துக்கு அதிவிரைவு ரயில் சேவை திட்டம் முதலில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்கள் அதிவிரைவு ரயில் சேவைக்காக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் வெகுவாக குறையும்.

அன்னிய முதலீடு
புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் ஆர்வம்
புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், ஜப்பானிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ரயில் பாதை அமைத்தல், ரயில் பெட்டிகள், தொழில்நுட்பம், முதலீடு ஆகியவற்றை ஜப்பான் அரசு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

நீண்ட நாள் கனவு
வரும் ஆண்டுகளில் புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டு விட்டால், அது இந்திய போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








