சென்னை - டெல்லி இடையே புல்லட் ரயில்- சீனாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு
மும்பை- ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் கைப்பற்றியிருக்கும் நிலையில், சென்னை- டெல்லி இடையிலான இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டத்தை சீனா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
உலகின் மிக நீளமான புல்லட் ரயில் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை-டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை சீனா மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வகை திட்டங்கள்
சென்னை- டெல்லி, மும்பை - ஆமதாபாத்- டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா ஆகியவை தங்க நாற்கர ரயில் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த வழித்தடங்களில் புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, டெல்லி- சண்டிகர் இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களும், டெல்லி- ஆக்ரா, சென்னை- பெங்களூர்- மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

மெகா திட்டம்
சென்னை- டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சீன ரயில் நிறுவனங்களுடன் இந்திய அதிகாரிகள் மட்டத்திலான குழு ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்திவிட்டது.

ஆய்வுப் பணிகள்
விரைவில் சீனா மற்றும் இந்திய தொழில்நுட்ப குழுவினர் இணைந்து சென்னை - டெல்லி இடையிலான வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

தூரம்
சென்னை- டெல்லி இடையில் 2,200 கிமீ தூரத்துக்கு ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளது. சீன தலைநகர் பீஜிங்- குவாங்ஸோ இடையிலான 2,298 கிமீ தூரத்துக்கான புல்லட் ரயில்தான் தற்போது உலகின் மிக பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பு கொண்ட வழித்தடமாக உள்ளது. இதற்கடுத்து, சென்னை- டெல்லி புல்லட் ரயில் வழித்தடம் அமைய இருக்கிறது.

முதலீடு
மும்பை- ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு 14.6 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், சென்னை - டெல்லி இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்திற்கு 32.6 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்படும் என மதிப்பு கூறப்படுகிறது.

வேகம்
சென்னை - டெல்லி இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.

பயண நேரம்
தற்போது சென்னை- நிஜாமுதீன் இடையிலான துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் 27 மணி 55 நிமிடங்களிலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 28 மணி 15 நிமிடங்களிலும் செல்கின்றன. ஆனால், புல்லட் ரயில்கள் இந்த இரு நகரங்களையும் 7 மணி 30 நிமிடங்களில் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கட்டணம் குறைவு
தற்போது சென்னை- டெல்லி இடையிலான விமானக் கட்டணத்தைவிட, புல்லட் ரயில்களில் கட்டணம் சற்று குறைவாக இருக்கும் என்பதோடு, பாதுகாப்பான பயணமாகவும் அமையும்.

பொருளாதார வளர்ச்சி
புல்லட் ரயில் வழித்தடம் அமையும் நகரங்களில் பொருளாதார ரீதியிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புல்லட் ரயில் தமிழகத்திற்கு மட்டுமின்றி, கர்நாடாகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் சில பகுதிகளை சேர்ந்த மக்களும் டெல்லிக்கு விரைவாக செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

ரயில்வே அமைச்சர் உறுதி
புளூம்பெர்க் டிவிக்கு அளித்த பேட்டியில் சென்னை- டெல்லி புல்லட் ரயில் திட்டம் குறித்த தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications