ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின்: ரயில்வே துறை தீவிரம்!
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சினை உருவாக்கும் பணிகளில் ரயில்வே துறை தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.
ரயில் எஞ்சின்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் ரயில் எஞ்சினை தயாரிக்க ரயில்வே துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் அண்மையில் தெரிவித்திருந்தார். டீசல் எஞ்சின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக, சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், சில சில மின் உற்பத்தி முறைகளின் மூலமாக தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத விஷயமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாற்று எரிபொருளில் இயங்கும் ரயில் எஞ்சினை உருவாக்குவதற்கு ரயில்வே துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன்படி, ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் ரயில் எஞ்சினை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே துறை தயாரிக்க இருக்கும் ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் 300kW மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். வாரணாசியில் இருக்கும் டீசல் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த புதிய ரயில் எஞ்சின் உருவாக்கும் பணிகள் நடக்க இருக்கின்றன.

இந்த ரயில் எஞ்சினில் கார்பன் ஃபைபர் மற்றும் உயர்வகை அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட 2 ஹைட்ரஜன் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஃப்யூவல் செல் ரயில் எஞ்சினில் காற்று குளிர்விப்பு வசதியுடன் கூடிய தலா 100kW மின்திறன் கொண்ட மூன்று மின் உற்பத்தி மையங்கள் இருக்கும். இவற்றின் மூலமாக ட்ரான்ஸ்ஃபார்மர் மூலமாக ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் இயக்கப்படும்.

தற்போது பயன்படுத்தப்படும் 21 டன் ஆக்ஸில்லோடு கொண்ட ரயில் எஞ்சின் அடிச்சட்டத்தை பயன்படுத்தி இந்த புதிய ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் உருவாக்கப்பட உள்ளது. டீசல் எஞ்சினில் பயன்படுத்தப்படும் ட்ராக்ஷன் மின்மோட்டார்கள், விஜிலென்ஸ் கன்ட்ரோல் சாதனம், ஏர் பிரேக், ஏர் ஹாரன் போன்றவை அப்படியே இந்த புதிய எஞ்சினிலும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கும், உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்கும் வாரணாசி டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலை நிர்வாகம் சார்பில் டென்டர் விடப்பட்டு இருக்கிறது. இதில், தேர்வு செய்யப்படும் உதிரிபாக சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்ற வாரணாசி டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலை முடிவு செய்துள்ளது.

புரோட்டோடைப் எஞ்சின் தயாரிக்கப்பட்டு விட்டால், மூன்று மாதங்களில் சோதனை ஓட்டங்களை நடத்தி முடிக்கவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இப்போது ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் மின்சார ரயில் எஞ்சின்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் தயாரிப்புக்கு ரயில்வே துறை முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications