இனிமே "கவுசிக்" குறுக்க வரவே முடியாது... வந்தே பாரத் ரயிலைக் காப்பாற்ற புதிய யோசனை!
ரயில்களில் மாடு அடிபடுவதைத் தடுக்க 1000 கி.மீ தூரத்திற்குச் சுவர் கட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் மும்பை முதல் குஜராத் மாநிலம் காந்திநகர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த ரயில் முன் மாடுகள் பாய்ந்ததில் ரயில் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் வந்தே பாரத் ரயிலின் மூக்கு பகுதி உடைந்து போன நிலையில் இந்த ரயிலின் தரம் குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கால்நடைகள் ரயிலில் அடிபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
ரயில்வே நிர்வாகத்தின் தகவலின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் 9 நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 200 ரயில்கள் கால்நடைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தாண்டு முழுவதும் இதே போல 4000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கால்நடைகள் ரயில் பாதையில் வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது : "ரயில்களில் கால்நடைகள் அடிபடுவதைத் தவிர்க்கத் தீவிரமான நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக 1000 கி.மீ வரை தண்டவாளங்களின் பக்கவாட்டில் சுவர்களைக் கட்ட திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 2 விதமான சுவர்களில் எதை அமைக்கலாம் என ஆலோசனை செய்கிறோம்.
ஒன்று நிரந்தரமான சுவர், மற்றொன்று தற்காலிக சுவர். இதில் நிரந்தரமான பொதுச் சுவர் அனைத்து விதமான கால்நடைகளையும் தடுத்துவிடும். தற்காலிக சுவர் மனிதர்கள் குறுக்கே செல்வதையும், பெரிய விலங்குகள் குறுக்கே செல்வதையும் தடுக்கும். இதில் எதை அமைக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறோம். எது முடிவாகிறதோ அதை அடுத்த 6 மாதத்திற்குள் அமைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். " எனக் கூறினார்.
பிடிஐயின் தகவலின் படி கடந்த 2020-21ம் ஆண்டில் பதிவான ரயிலில் அடிபட்ட கால்நடை குறித்து மொத்தம் 26,000 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் 6500 விபத்துக்கள் வடமத்திய ரயில்வே பகுதியில் தான் நடந்துள்ளது. இந்த பகுதி முக்கியமாக டில்லி- மும்பை மற்றும் டில்லி-ஹவுரா ஆகிய பகுதிகளை இணைக்கிறது. கிட்டத்தட்ட 3000 கி.மீ நீளத்திற்குத் தண்டவாளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசு கால்நடைகள் சிக்குவதைத் தவிர்க்கச் சுவர் கட்ட முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








