எலெக்ட்ரிக் வண்டிக்கு மாற வேண்டிய நேரம் வந்தாச்சு... இவ்ளோ சலுகைகள் வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மேலும் ஒரு மாநில அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியம் வழங்கி கொண்டுள்ளன.

டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் மாநிலமும் இணைந்துள்ளது. ஆம், ராஜஸ்தான் மாநில அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ராஜஸ்தானின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை வித்தியாசமாக உள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, ராஜஸ்தான் மாநில அரசு எஸ்ஜிஎஸ்டி (SGST - State Goods and Service Tax) தொகையை திருப்பி வழங்கும். இதுதவிர எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியமும் வழங்கப்படும்.

பேட்டரி திறன் அடிப்படையில் இந்த மானிய தொகை வழங்கப்படவுள்ளது. 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட/வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானிய தொகை வழங்கப்படவுள்ளது.

எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் வகை, பேட்டரி கெபாசிட்டி எவ்வளவு kWH ஆகிய அம்சங்களை பொறுத்து, 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சமாக 2 kWH வரையிலான பேட்டரி திறன் கொண்ட எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

அதிகபட்சமாக 5 kWH-க்கும் அதிகமான பேட்டரி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு வழங்கவுள்ள இந்த சலுகைகள் மட்டுமல்லாது, ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் சலுகைகளையும் மக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இரண்டு திட்டங்களின் கீழும் சலுகை கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் அவற்றின் விலை அதிகமாக இருப்பது முக்கியமான ஒன்று. ஆனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும்.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








