திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டல் மீது மோதியது... அசாரின் கார் விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுதான்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதில், பலர் உயிரிழந்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு என கணக்கிட்டால், இங்கு தோராயமாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. சில சமயங்களில் பழுதடைந்த சாலைகளும், வாகனங்களில் ஏற்படும் கோளாறும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில், தமிழகத்தில் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்து குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த லாரி 2 பேர் மீது மோதவிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அவர்கள் தப்பி விட்டனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும், அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிக்கியுள்ளனர். ஆனால் இது சிறிய விபத்துதான். எனவே அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பி விட்டனர்.

அசாருதீனும், அவரது குடும்பத்தினரும் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவகம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சோர்வால் எனும் பகுதியில் நேற்று (டிசம்பர் 30ம் தேதி) நடைபெற்றுள்ளது.

அசாருதீனும், அவரது குடும்பத்தினரும் ரந்தம்போர் தேசிய பூங்காவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் வழியில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கொண்டனர். காரின் ஒரு டயர் திடீரென வெடித்த காரணத்தால், இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில், காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் முன் பக்க ஏர்பேக்குகள் விரிவடைந்து காரின் உள்ளே அமர்ந்திருந்தவர்களை காப்பாற்றியுள்ளன. இதன்பின் உடனடியாக வேறு ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, அசாருதீனும், அவரது குடும்பத்தினரும் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உணவக ஊழியர் ஒருவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

சவாய் மாதோபூர் மாவட்ட மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரரின் கார் விபத்தில் சிக்கியதால் அங்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி விட்டதாக கூறப்படுகிறது.

காவல் துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர். பொதுவாக கோடை காலத்தில் டயர் வெடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வரும் சூழலில், தற்போது அந்த காரணத்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








