துணை முதலமைச்சர் சீட்ல இருந்து அப்பாவ கீழ இறக்க பையன் போதும்! போலீஸ் பாதுகாப்போட எல்லா கூத்தும் நடக்குது!
அரசியல்வாதிகளின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக உயர் பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் குடும்பத்தினர் செய்யும் காரியங்கள், பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன. அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அரசு அதிகாரிகளை தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது என அவர்களது அதிகார துஷ்பிரயோகங்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்த வரிசையில் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் மகன், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காரணத்தால், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், இளைஞர்கள் சிலர் ஜீப் (Jeep) வாகனத்தில், ஜாலியாக பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அது மேற்கூரை இல்லாத 'ஓபன் ஜீப்' ஆகும். இந்த இளைஞர்கள், போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறியதாக கூறப்படுகிறது. அதாவது லேன் விதிமுறைகளை எல்லாம் அவர்கள் பின்பற்றவில்லை என தெரிகிறது. இளைஞர்கள் பயணம் செய்த ஜீப்பிற்கு பாதுகாப்பிற்காக, போலீஸ் கார் வருவதையும் இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
ஏனெனில் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சரின் (Rajasthan Deputy CM) மகன் அந்த ஜீப்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பிரேம் சந்த் பைர்வா (Prem Chand Bairwa) பணியாற்றி வருகிறார். இவர் பாஜக (BJP) கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

உயரிய பொறுப்பில் உள்ள அவரது மகன், ராட்சத டயர்கள் போன்றவற்றுடன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஜீப் வாகனத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணம் செய்ததுடன் மட்டுமல்லாது, உடன் பாதுகாப்பிற்கு காவல் துறை அதிகாரிகளை அழைத்து சென்றது, ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும், ராஜஸ்தான் துணை முதலமைச்சரின் மகன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக, கருத்து தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைர்வா தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவில் துணை முதலமைச்சரின் மகனுடன் இருப்பவர்கள், அவரது பள்ளி தோழர்கள் என கூறப்படுகிறது. உடன் இருந்த மற்றவர்களில் ஒருவர், காங்கிரஸ் (Congress) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரின் மகன் என கூறப்படுகிறது. தந்தைகளின் கட்சி வேறுபாடுகளை கடந்து, மகன்கள் ஒற்றுமையாக இருப்பது நல்ல விஷயம்தான்.
ஆனால் உயரிய பொறுப்பில் உள்ளவர்களின் மகன்கள் என்பதால், அதை உணர்ந்து கொண்டு செயல்படுவது நல்லது. ஏனெனில் உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களின் குடும்பத்தினர் செய்யும் தவறுகள், பொதுமக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இருப்பினும் துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்டிருப்பது, நல்ல விஷயம்.


Click it and Unblock the Notifications








