ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்!
ராஜஸ்தான் மாநிலத்தில் 6 நண்பர்கள் தங்களது 4 கார்களை மருத்துவமனைகளாக மாற்றியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவிட்-19 இரண்டாவது அலை இந்திய மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு படுக்கைகளும், ஆக்ஸிஜனும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சிலர் தங்களால் இயன்ற உதவிகளை நோயாளிகளுக்கு செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் 6 நண்பர்களை பற்றிய செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இவர்கள் தங்களுடைய 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத கோவிட்-19 நோயாளிகளுக்கு அவர்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்கள் தங்களது கார்களை மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் இடம் கிடைக்காத கோவிட்-19 நோயாளி அவசர சூழ்நிலை என்றால், அந்த கார்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கார்களில் ஆக்ஸிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் காரின் உள்ளே அமர்ந்து ஆக்ஸிஜனை பெற்று கொள்ளலாம். அத்துடன் நோயாளிகளுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக காரின் ஏசி-யையும் அவர்கள் ஆன் செய்து விடுகின்றனர்.

இந்த 4 கார்களில் ஒன்று, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகும். மற்றொன்று ஃபோக்ஸ்வேகன் போலோ. அவர்கள் பயன்படுத்தி வரும் மற்ற 2 கார்கள் எது? என்பது உறுதியாக தெரியவில்லை. கடந்த சில வாரங்களாவே அவர்கள் நோயாளிகளுக்கு இந்த உதவியை செய்து வருகின்றனர். தினமும் குறைந்தபட்சம் 5 முதல் 6 பேருக்கு அவர்கள் உதவி செய்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்தான் இந்த நண்பர்கள் குழு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறது. கோட்டா நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் ஆக்ஸிஜனை பெற்று வருகின்றனர். ஆனால் ஆக்ஸிஜன் பெற வேண்டுமென்றால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த உதவிகள் அனைத்தையும் அவர்கள் தங்களது சொந்த பணத்தில் செய்து வருகின்றனர். வெளியில் இருந்து யாரிடமும் உதவி பெறவில்லை. வரும் காலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்குவதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக இன்னும் பலருக்கு உதவி செய்வதற்கு இந்த நண்பர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது மருத்துவ ஆக்ஸிஜனுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகதான் உள்ளது. எனினும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கோவிட்-19 பிரச்னையில் இருந்து உலகம் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
ஆனால் இந்த இக்கட்டான காலகட்டம் நமக்கு அருகிலேயே இருக்கும் உண்மையான ஹீரோக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கோட்டா நகரில் நோயாளிகளுக்கு உதவி செய்து வரும் இந்த இளைஞர்களை அதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








