ஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...
ஆசை ஆசையாய் வாங்கிய ஜாவா பைக் அடிக்கடி பழுதானதால், உரிமையாளர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலவிதமான கனவுகளுடனும், பெரும் எதிர்பார்ப்புகளுடனும்தான் நாம் அனைவரும் புதிய வாகனங்களை வாங்குகிறோம். அப்படி வாங்கப்பட்ட வாகனம் அடிக்கடி பழுதானால், கண்டிப்பாக எரிச்சல் ஏற்படும். சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் பழுதை சரி செய்து கொடுத்து விட்டால் கூட, ஓரளவிற்கு நிம்மதி கிடைக்கும். இல்லாவிட்டால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத ஒரு சில வாகன உரிமையாளர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் வாகன உற்பத்தி நிறுவனங்களிடமும், டீலர்ஷிப்களிடமும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். இந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜாவா பைக் உரிமையாளர் ஒருவர் கழுதைகளுடன் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியை சேர்ந்தவர் அபேராஜ் சிங். இவர் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாவா 42 (Jawa 42) பைக் ஒன்றை வாங்கினார். ஆனால் அந்த பைக் அடிக்கடி பழுதாகி, அபேராஜ் சிங்கை பாடாய்படுத்தி விட்டது. பைக் ஆர்வலரான அபேராஜ் சிங், பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜாவா 42 பைக்கை வாங்கியதாக கூறியுள்ளார்.

ஆனால் எட்டு மாதங்களில் மூன்று முறை பைக் பழுதாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பைக் அடிக்கடி பழுதாவது குறித்து ஜாவா நிறுவனத்திற்கு அவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான அனுபவங்களை எல்லாம் அபேராஜ் சிங் கொட்டி தீர்த்துள்ளார். 100 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவிற்கு பைக்கை எடுத்து சென்றபோதெல்லாம் அது பழுதாகி விட்டதாம்.

வீட்டில் இருந்து 37 கிலோ மீட்டர், 112 கிலோ மீட்டர் மற்றும் 55 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சமயங்களில், பைக் பழுதானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று முறையும் அவர் பைக்கை டீலர்ஷிப்பிற்கு எடுத்து சென்றுள்ளார். பைக் பழுதான இடத்தில் இருந்து டீலர்ஷிப்பிற்கு கொண்டு செல்வதற்கு, பெரும் தொகையை அவர் செலவிட்டுள்ளார்.

ஆனால் பைக்கோ அல்லது டீலர்ஷிப் ஊழியர்களின் நடத்தையோ தனக்கு திருப்தியை தரவில்லை என்று அபேராஜ் சிங் தெரிவித்துள்ளார். பைக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தருவதற்கு அவர்கள் ஒவ்வொரு முறையும் 15 நாட்களை எடுத்து கொண்டனர் என்பது அபேராஜ் சிங்கின் வாதம். தனக்கு திருப்திகரமான தீர்வை ஜாவா நிறுவனம் வழங்க வேண்டும் என்பதுதான் அவருடைய தற்போதைய வேண்டுகோள்.

இல்லாவிட்டால் பணத்தை திரும்ப பெற நீதிமன்றத்தை அணுகவும் அவர் தயங்க மாட்டாராம். முன்னதாக ஜாவா நிறுவனத்திற்கு தான் அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கீரின் ஷாட்டை கடந்த ஜூலை 6ம் தேதி அவர் டிவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கிளாசிக் லெஜண்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஆஷிஸ் ஜோஷி ஆகியோரையும் டேக் செய்தார்.

அதற்கு மறுநாள் ஜாவா நிறுவனத்திடம் இருந்து அவருக்கு பதில் வந்துள்ளது. அபேராஜ் சிங்கின் பைக்குடைய புக்கிங் ஐடி மற்றும் டீலர்ஷிப் விபரங்களை கேட்டுள்ளனர். அவற்றை அபேராஜ் சிங் வழங்கி விட்டார். ஆனால் மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அபேராஜ் சிங் ஆகஸ்ட் 2ம் தேதி வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர்.

உதய்பூரில் உள்ள ஜாவா டீலர்ஷிப்பிற்கு கழுதைகளுடன் சென்று அவர் போராட்டம் நடத்தியுள்ளார். தனது அதிருப்தியை காட்டுவதற்காக அவர் கழுதைகளை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இது தொடர்பாக மேற்கொண்டு எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. ஜாவா நிறுவனம் இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்யும் என நம்பலாம். இதுகுறித்து ரஷ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








