காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
ராஜஸ்தான் மாநிலத்தில் காலி பால்பாக்கெட் மற்றும் வாட்டர் பாட்டில்களை வழங்கினால் தள்ளுபடி விலையில் பெட்ரோல், டீசல்களை ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் விற்பனை செய்து வருகிறார். மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்திய பால்பாக்கெட்களை குப்பையில் வீசாமல் இவர்களிடம் கொடுத்தால் குறைந்த விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். இது குறித்த முழுமையான மற்றும் விரிவான தகவல்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

இன்று உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை சுற்றுச் சூழலை மனிதர்கள் பாழாக்குவதுதான். ஒரு இடத்தில் விலங்குகள் பயன்படுத்தி வந்தால் அந்த இடத்தில் விலங்குகளின் கால்தடமும், அதிகபட்சம் இதன் உணவுகளின் எச்சங்களே இருக்கும்.

ஆனால் மனிதர்கள் ஒரு இடத்தை பயன்படுத்தினால் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமாக இருக்கும். மனிதர்கள் படுத்திய பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் எனப் பல விஷயங்கள் குப்பைகளாகக் கிடக்கும்.

மனிதர்களுக்கு இன்னும் பிளாஸ்டிக்கை இப்படி வெளியில் வீசுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக் காத்திருக்கும் பாதிப்புகள் குறித்த எந்த யோசனையும் இல்லை. தங்கள் இஷ்டத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகளை வீசி வருகின்றனர். பிளாஸ்டிக் போன்ற ஒரு உன்னதமான படைப்பு நம்மை அழிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதைச் சரியான முறையில் நாம் கையாள வேண்டும்.

இதை உணர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதன்படி அவர் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வருபவர்கள் தாங்கள் வீட்டில் பயன்படுத்திய 1 லிட்டர் பால் பாக்கெட்டின் பிளாக்டிக் கவர் அல்லது 2 அரை லிட்டர் பாக்கெட்டின் கவரை வழங்கினால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ1 குறைத்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வழங்கினால் அதற்கும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ1 தள்ளுபடியும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடியும் வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் உள்ளூரில் உள்ள பால் விநியோக நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த பெட்ரோல் பங்க்கில் சேரும் பால் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டகளை அந்நிறுவனம் முறையாகச் சேகரித்து அதை மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள சாகங்லால் பக்தவர்மால் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் அசோக் குமார் முந்த்ரா தன் பெட்ரோல் பங்கின் தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதற்காக சாராஸ் டைரி மற்றும் வாட்டர் பாட்டில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளார். அதன்படி இவர் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் பால்கவர் மற்றும் வாட்டர் பாட்டில்களை சேகரித்து அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் போட்டு வைக்கிறார். அதை அவ்வப்போது சாராஸ் டைரி நிறுவனத்தினர் வந்து எடுத்துச் செல்கின்றனர்.

இதுவரை 700 காலி பால் பாக்கெட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முந்த்ரா மாதம் 10 ஆயிரம் காலி பால் பாக்கெட்களை சேகரிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்தை 6 மாதங்கள் தொடர்ந்து செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மேலும் சாராஸ்டைரி நிறுவனம் காலி பால் பாக்கெட்களுக்கு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கூப்பன்களை வழங்கவும் அதை வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்ற திட்டத்தைச் செயல்முறைப்படுத்த யோசித்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications