கார் டிரைவர் செய்த காரியத்தால் உறைந்து போன போலீஸ்காரர்... வீடியோ பாக்கறப்பவே அடி வயிறு கலங்குது...
அதிவேகத்தில் வந்த காரை நிறுத்துவதற்கு, போக்குவரத்து காவலர் முயற்சித்தபோது, ஓட்டுனர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு சில நிகழ்வுகள், போக்குவரத்து காவல் துறையினரின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. தலைநகர் புது டெல்லியில் கடந்த திங்கள் கிழமையன்று, போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதிமுறையை மீறிய ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஒரு போக்குவரத்து காவலர், காரின் முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் ஓட்டுனர் காரை எடுக்க, முன்னால் நின்று கொண்டிருந்த காவலர், பானெட்டின் மீது தவறி விழுந்தார். ஆனால் ஓட்டுனர் காரை நிறுத்தாமல், தொடர்ந்து ஓட்டி சென்றார். காரின் பானெட்டை பிடித்து தொங்கியபடியே காவலர் சென்ற இந்த காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

கொஞ்ச தூரம் சென்ற பிறகு, அந்த காவலர் சாலையில் தவறி விழுந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே பாணியில் மற்றொரு சம்பவம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது. டெல்லி சம்பவம் நடைபெற்றதற்கு மறுநாள், அதாவது கடந்த செவ்வாய்கிழமையன்று ராஜஸ்தானில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதிவேகத்தில் வந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் என்பவர், பானெட்டில் தவறி விழுந்தார். ஆனால் மனிதாபிமானமற்ற அந்த ஓட்டுனர் காரை நிறுத்தாமலேயே ஓட்டி சென்றார். எனவே போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரின் பானெட்டை பிடித்து தொங்கியபடியே சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் காரில் இருந்து அவர் குதித்துள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரின் பானெட்டை பற்றிக்கொண்டே போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் செல்லும் காணொளியும் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த கொடூரத்தை கண்ட ஒரு சிலர், காரை நிறுத்துவதற்காக சாலையின் மைய பகுதிக்கு விரையும் காட்சிகளையும் இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் ஓட்டுனர் காரை நிறுத்தாமலேயே ஓட்டி சென்றுள்ளார். இந்த காரின் ஓட்டுனர் மணிக்கு 82 கிலோ மீட்டர்கள் வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த காரின் ஓட்டுனர் வேக வரம்பை மீறியதுடன், போக்குவரத்து காவலரின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபரை காவல் துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரின் பதிவு எண் மூலமாக முகவரியை கண்டுபிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொடுக்கப்பட்ட முகவரி போலியானது என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது. எனினும் அவரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, போக்குவரத்து காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








