கிரெட்டா காரை ஹெல்மெட் போட்டுத்தான் ஓட்டனுமா? ஃபைன் போட்ட போலீஸை மரண பங்கமாக கலாய்த்த இளைஞர்
கார் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்ததால் இளைஞர் ஒருவர் தற்போது கார் ஒட்டும் போதும் ஹெல்மெட் அணிந்து செல்லும் விசித்திர சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிஹிவாடியை அடுத்த கோஹ்ரி குர்த் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் முகம்மது, இவர் சொந்தமாக ஹூண்டாய் கிரெட்டா காரை வைத்திருக்கிறார். சம்பவம் நடந்த நாளன்று இவர் தனது காரில் மதிய நேரத்தில் பிஹிவாடி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது இவரது காரை ஓவர் டேக் செய்த கார் ஒன்று இவரது காரை ஓரம் கட்டி நிறுத்தியது. இவரும் காரை நிறுத்தினார்.

காரை நிறுத்திய பின்புதான் இவரது காரை நிறுத்தியது போலீசார் எனத் தெரிந்து கொண்டார். பின்னர் இவர் காரிலிருந்து சென்ற போது காரில் வந்த போலீசார் இவரிடம் ரூ2000 கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தர கலீல் மறுத்துள்ளார். இதனால் போலீசார் அவரை மிரட்டி காரின் ஆவணங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆவணங்கள் சரியாக இருந்த நிலையில் மீண்டும் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. கலீல் பணம் தர உறுதியாக மறுக்கவே, போலீசார் அவருக்கு அபராத ரசீது போட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த அபராத ரசீதைப் பார்க்கும்போது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் ஹெல்மெட் அணியவில்லை என்ற குற்றத்திற்காக இவருக்கு போலீசார் ரூ1000க்கு அபராத ரசீதைப் போட்டுள்ளனர். இது குறித்து இவர் பிஹிவாடி எஸ்பி மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இவர் தற்போது தனது காரில் செல்லும் போதும் ஹெல்மெட் அணிந்து பயணிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் டிராஃபிக் போலீஸார் இப்படியாக காருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிப்பது இது முதன் முறையல்ல இதற்கு முன்னர் பல முறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானாலும் இதைத் தடுக்க போலீஸ் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் வாங்கும் சம்பவம் அதிகமாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இது சாதாரண விஷயமாக இருக்கிறது. இப்படியாக ஈடுபடும் போலீசார் வீடியோ ஆதாரங்களுடன் பிடிபடும் போதிலும் அவர்களுக்கு போதுமான எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிராஃபிக் போலீசார் இப்படியாகத் தாறுமாறாக அபராதம் விதிப்பது அவர்கள் பணியில் கவனம் இல்லாததைக் குறிக்கிறது. காரில் வந்தவருக்கு ஹெல்டமெட் இல்லை அபராதம் போடுவது, பைக்கில் வந்தவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் போடுவது அவ்வப்போது நடக்கிறது. இப்படியாகக் கவனக்குறைவாக பணியில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








