ஹைப்ரிட் பைக்கை உருவாக்கிய மாணவர்கள்... ஓட்றதுக்கு எவ்ளோ செலவு ஆகும்னு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க!
ஹைப்ரிட் பைக் ஒன்றை, கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் அதிகரிக்கப்படவில்லை. எனவே நடுவழியில் சார்ஜ் தீர்ந்து நின்று விட்டால் என்ன செய்வது? என்ற கவலை மக்களுக்கு உள்ளது.

ஆனால் ராஜ்கோட் நகரில் உள்ள விவிபி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டறிந்துள்ளனர். ஆம், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டின் மூலமும் இயங்க கூடிய பைக்கை ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஹைப்ரிட் பைக் தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து மெக்கானிக்கல் துறையின் தலைவரான டாக்டர் மணியர் கூறுகையில், ''எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் அதிக விலை, மெதுவாக சார்ஜ் ஏறுவது என எலெக்ட்ரிக் வாகனங்களிலும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. எனவே பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டின் மூலமும் இயங்கும் பைக்கை வடிவமைக்க விரும்பினோம்.

ஏற்கனவே பெட்ரோலில் இயங்கி கொண்டிருந்த ஒரு பைக்கை தற்போது கூடுதலாக மின்சாரத்திலும் இயங்கும்படி இந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து டாக்டர் மணியர் மேலும் கூறுகையில், ''நான்கு பேட்டரிகளை மாணவர்கள் இணைத்துள்ளனர். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 6 மணி நேரம் ஆகும்.

பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் 40 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இதற்கு 17 பைசா மட்டுமே செலவு ஆகும்'' என்றார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டின் மூலமாகவும் இயக்கலாம். இதற்காக 2 ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சார்ஜ் தீர்ந்து விட்டால், பெட்ரோல் மூலமாக பைக்கை இயக்கி கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற ஹைப்ரிட் பைக் உருவாக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களிலும் பெட்ரோல் பைக்குகள் ஹைப்ரிட் பைக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பெட்ரோல் பைக்குகளை பலர் எலெக்ட்ரிக் பைக்குகளாகவும் மாற்றியுள்ளனர். ஆனால் இங்கே மாணவர்கள் உருவாக்கியுள்ள ஹைப்ரிட் பைக்கை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருப்பது சிறப்பம்சம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் இதுபோன்ற ஹைப்ரிட் பைக்குகள் விற்பனைக்கு வந்தால், அவை பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஹைப்ரிட் பைக்குகளில் ரேஞ்ச் பற்றிய கவலையும் இருக்காது. ஆனால் விலை நிர்ணயம் சரியாக இருக்க வேண்டும். எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலம் ஆகாமல் இருப்பதற்கு, அவற்றின் அதிக விலை முக்கிய காரணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications