யாரு சாமி இந்த குடும்பம்... ஒவ்வொரு காரின் விலையும் கோடி ரூபாய்! ஒரே நாளில் சொந்தமாக்கியாச்சு!
இந்தியாவில் சொகுசு எஸ்யூவி (SUV) கார் வாங்குவது பலரின் கனவாக உள்ளது. ஆண்டுதோறும் பலர் இந்தக் கனவை நனவாக்குகிறார்கள். பொதுவாக, பெரும்பாலானோர் ஒரு சொகுசு காரை வாங்கினால், அடுத்த ஒன்றை வாங்குவதற்கு பல மாதங்களை எடுத்துக் கொள்வர். ஆனால், குஜராத்தின் ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு குடும்பம் ஒரே நாளில், ஒரே இடத்தில், இரண்டு சொகுசு எஸ்யூவி கார்களை டெலிவிரி பெற்றுள்ளது.
அவர்கள் டெலிவிரி பெற்று இருப்பது லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 (Land Rover 110) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) கார்கள் ஆகும். இதுதொடர்பான விபரங்கள் 'Supercars.rajkot' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கணவன், மனைவி, மகன், மகள் மற்றும் பாட்டி அடங்கிய அந்தக் குடும்பத்தினர், வாகனங்களை டெலிவரி எடுக்கும் இடத்தில் ஒன்றாக கூடி கார்களை டெலிவிரி பெற்றுள்ளனர்.

டெலிவரி இடத்தின் புல்வெளியில், இரண்டு எஸ்யூவி கார்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. இரண்டு கார்களும் மடக்கக்கூடிய பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. குடும்பத்தினர் பெட்டிகளின் நடுவில் நின்று, ரிப்பன்களை இழுத்து கார்களை வெளிப்படுத்தினர். அப்போதும்கூட, அவை கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தன. அவற்றை அகற்றிய நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, நிகழ்வு மேலும் சிறப்பாக்கப்பட்டது.
பின்னர், குடும்பத்தினர் முதலில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் முன் நின்று, கருப்பு நிறத்தில் ஜொலிக்கும் அந்த எஸ்யூவி காரை பார்வையிட்டனர். அதன்பின், லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110-க்கு சென்று, அதன் அழகையும் பார்வையிட்டனர். இந்த வாகனங்களின் உரிமையாளரின் மகனிடம் ஒன்றன் பின் ஒன்றாக காரின் சாவிகள் வழங்கப்பட்டன.

இந்த ராஜ்கோட் குடும்பத்தினர் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆனது இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய தலைமுறை மாடல் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.75.80 லட்சம். குடும்பத்தினர் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட வேரியண்ட் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 2025 மாடலுக்காக, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது இப்போது, சாய்வான மற்றும் கிடைமட்ட கோடுகளுடன் கூடிய புதிய ஒளிரும் 'கிட்னி கிரில்' பகுதியை கொண்டுள்ளது. எக்ஸ்3 மெல்லிய ஹெட்லைட்கள், இரட்டை LED DRLகள், புதிய LED டெயில்லைட்கள் மற்றும் புதிய அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இது மிகவும் நவீனமாகவும் எதிர்காலத் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது.
தொழிற்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, இது 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் மற்றும் ஐ-டிரைவ் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மென்பொருளுடன் கூடிய 14.9 அங்குல டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்3 காரை இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. இரண்டுமே 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின்கள் ஆகும்.

இந்த குடும்பம் வாங்கியுள்ள மற்றொரு சொகுசு எஸ்யூவி காரான ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் சான்டோரினி கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த எஸ்யூவி காரின் விலை ரூ.98 லட்சத்தில் தொடங்கி ரூ.2.42 கோடி வரை உள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90 (மூன்று கதவுகள்), 110 (ஐந்து கதவுகள் கொண்ட ஷார்ட் வீல்பேஸ்) மற்றும் 130 (லாங் வீல்பேஸ்) என மூன்று பாடி ஸ்டைல்களில் கிடைக்கின்றன.
இதில் இந்த குடும்பம் வாங்கியிருக்கும் டிஃபெண்டர் 110 காரின் என்ஜின் ஆப்ஷன்களில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள், அத்துடன் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை அடங்குகின்றன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார்களை வாங்கியவர் வசுகி குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் உரிமையாளர் பங்கின் காந்திலால் மேத்தா ஆவார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குஜராத்தின் ராஜ்கோட்டில் அமைந்துள்ள இவர்களது நிறுவனம், சிமென்ட், இரும்பு மற்றும் கட்டுமானத் தொழில்களுக்கான கொள்முதல், செயலாக்கம் மற்றும் தளவாட சேவைகளை வழங்குகிறது. இந்த அளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்குவதினாலேயே ஒரே நாளில், ஒரே நேரத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான இரு விலையுயர்ந்த கார்களை இவர்களால் வாங்க முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications









