ராமர் கோயில் திறப்புக்கு எல்லாமே தயார்!! இந்தியன் இரயில்வே சூப்பரான பிளான் உடன் இருக்கு!!
ராமர் கோயில் திறந்த பிறகு முதல் 100 நாட்களில் அயோத்திக்கு ஆயிரத்திற்கும் அதிகமான இரயில்களை இயக்க இந்தியன் இரயில்வே திட்டமிட்டு வருவதாக ஓர் மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால், எந்தெந்த பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதியதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வருகிற 2024 ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து கோயிலுக்குள் தரிசனம் செய்யலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதற்கு முன்னதாக, ஜனவரி 19ஆம் தேதியில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்களை இயக்க இந்திய இரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ராமர் கோயில் திறக்கப்படும் முதல் 100 நாட்களுக்கு மக்களின் வசதிக்காக ஆயிரத்திற்கும் அதிகமான இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த இரயில்கள் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, புனே, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்மூ காஷ்மீரில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் விதமாக செயல்படுத்தப்பட உள்ளன. அதிக கூட்டம் ஏற்படும் வழித்தடங்களில் கூடுதல் இரயில்களை இயக்கவும் இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. அதேநேரம், அயோத்தி இரயில் நிலையமும், அதிக பயணிகள் வருகைக்காக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பயணிகள் வந்தாலும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் அயோத்தி இரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் அனைத்தும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும் எனவும் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. சில சிறப்பு அயோத்தி இரயில்கள் யாத்ரீகர்கள் குழுவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோயில் பூஜையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயில் திறக்கப்பட்டு முதல் 10- 15 நாட்களுக்கு யாத்ரீகர்களின் வருகை அயோத்தியில் அதிகமாக இருக்கும் எனவும், அவர்களுக்கான உணவுகளை இரயிலில் முறையாக வழங்க ஐ.ஆர்.சி.டி.சி தயாராகி வருகிறது.

தேவை ஏற்பட்டால், அயோத்தி இரயில் நிலையத்தில் கூடுதலாக உணவகங்களை திறக்கவும் இந்தியன் இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஒருபக்கம் ராமர் கோயில் திறப்புக்கு இந்தியன் இரயில்வே துறை தயாராகிக் கொண்டிருக்க, மறுப்பக்கம், இந்திய விமான துறையும் தனது பங்கிற்கு அயோத்தியில் புதிய விமான நிலையத்தை நிறுவி வருகிறது.
புதிய அயோத்தி விமான நிலைய பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. ஆதலால், டிசம்பர் 25ஆம் தேதியன்று இந்த விமான நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றிலும் பல்வேறு விதமான சிறு, சிறு சுற்றுலா மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக, அயோத்தியில் ஓடும் சர்யு நதியில் நீர் மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் பார்க்கும்போது, அடுத்த ஜனவரி மாதத்தில் அயோத்தி தான் இந்தியா அளவில் டாப் டிரெண்டிங்காக இருக்கும். அதற்கு இணையாக, அயோத்திக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு தயாராகி வருவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications









