குடும்பத்துடன் டெஸ்ட் டிரைவ் செய்த தொழிலதிபர் விபத்தில் சிக்கி பலி: விபத்திற்கான அதிர்ச்சி தகவல்!
டெஸ்ட் டிரைவ் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் தொழிலதிபர் ஒருவர் பலி. மேலும், அவருடன் சென்ற அவரது மனைவி, குழந்தை, நண்பர் மற்றும் டெஸ்ட் டிரைவ் கார் ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம், தனது ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவி காரை விற்பனைக்காக இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தது. மேலும், அந்த காரின் மேற்கூரையை மூடித் திறக்கும் வகையில் (கன்வர்ட்டிபிள்) ரகத்தில் அப்கிரேட் செய்து அந்நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் அறிமுகம் செய்தது.
உலகப்புகழ்வாய்ந்த எஸ்யூவி மாடல்களில் ஒன்றான இந்த ரேஞ்ச் ரோவர் இவோக் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இவோக் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்த தொழிலதிபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள பத்மநாபநகரத்தைச் சேர்ந்தவர் சாகர் (31). இவர் புதிதாக வந்துள்ள ரேஞ்ச் ரோவரின் இவோக் மாடல் காரை வாங்குவதற்காக திட்டமிட்டுள்ளார். இதற்காக அருகாமையில் ரூபெனா அக்ரஹாரா ஷோரூமில் இவோக் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், ஷோரூமின் ஊழியர் சிவக்குமார், இவோக் காரை சாகர் வீட்டிற்கு நேற்று (செவ்வாய்கிழமை) எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, டெஸ்ட் டிரைவ் செய்யும் விதமாக காரினை சாகர், இயக்கியுள்ளார். அப்போது, அவரது மனைவி சந்தியா (27), மகன் சமர்தா (6) மற்றும் நண்பர் கவுதம் (30) ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதில், காரின் முன்பக்கத்தில் மனைவி சந்தியாவையும், குழந்தையையும் அமரச் செய்த சாகர், கவுதம் மற்றும் சிவக்குமாரை பின் இறுக்கையில் அமர வைத்துள்ளார்.

இதையடுத்து, ஒசகரஹல்லி ரிங் ரோடுக்கு செல்லும் என்ஐசிஇ சாலையில் காரை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். அவ்வாறு, காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது பிஇஎஸ் கல்லூரி டோல்கேட் வந்துள்ளது. இதன்காரணமாக, காரின் வேகத்தைக் குறைக்க சாகர், பிரேக் பிடித்துள்ளார். ஆனால், அப்போது காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்துச்சிதறியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓட ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து சாலையின் ஓரத்தில் இருந்த சிமெண்ட் டிவைடர் மீது மோதிய இவோக் கார், அருகில் இருந்த 10 மீட்டர் பள்ளத்தில் அதிவேகமாக உருண்டு உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் கார் தாறுமாறாக நொருங்கியது. மேலும், காரை இயக்கிவந்த சாகர் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர், ஷோரூம் ஊழியர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

சம்பவத்தின்போது, டோல்கேட் அருகில் இருந்த மக்கள் கொடுத்த தகவலின்பேரில் வந்த போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சாகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சாகரின் மனைவிக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது ஆறு வயது குழந்தை, கவுதம், சிவக்குமார் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர். விபத்தின்போது, ஒரு பக்கத்தில் மட்டுமே ஏர் பேக் வேலை செய்ததாகவும், மற்றொரு பக்கத்தில் ஏர் பேக் வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கார் அதிவேகமாகச் சென்றதும், பின் பிக்பக்க வலதுபுற டயர் வெடித்ததும் தான் இந்த விபத்திற்கான காரணம் போலீஸார் கூறுகின்றனர்.

எஸ்யூவி ரகத்தில் விற்பனையாகும் முதல் பத்து கார்களில் ரேஞ்ச் ரோவரின் இவோக் காரும் ஒன்று. ஆடம்பரமான, சொகுசு மற்றும் பாதுகாப்பான கார் என்பதால் இது அதிகளவில் விற்பனையாகி வருகின்றது. இந்த காரில் 237 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 340என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும், இந்த கார் 0-த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை 8 செகண்டில் தொட்டுவிடும். இது மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கார் இந்திய மதிப்பில் 65 -ல் இருந்து 70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications