பைக், ஆட்டோ தொடர்ந்து காரையும் சேவையில் இணைத்த ரேபிடோ.. ஓலா, ஊபேருக்கு ஆப்பு உருவாகிருச்சு!
ஃபாஸ்ட்-ட்ராக் (Fastrack) போன்ற முன்னணி கால் டாக்சி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்தியா வந்த நிறுவனங்களே ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) ஆகும். இவை இரண்டும்தான் தற்போது நாட்டின் முன்னணி கேப் சேவை நிறுவனங்கள் ஆகும். இவற்றிற்கு போட்டியாக வந்த வாடகை வாகன சேவை நிறுவனமே ரேபிடோ (Rapido) ஆகும்.
இந்த நிறுவனம் பைக் டாக்சி மற்றும் ஆட்டோ ஆகியவற்றை மட்டுமே புக் செய்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கி வந்தது. ரொம்ப நாட்களாக இந்த நிறுவனத்தின் பயனர்கள் மத்தியில் எப்போதுதான் ரேபிடோ காரை புக் செய்யும் வசதியையும் வழங்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையிலேயே ரேபிடோ கார்களையும் அதன் வாடகை வாகன சேவையில் களமிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக இந்த சேவையை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே தொடங்கி இருக்கின்றது. தலைநகர் டெல்ல, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே வாடகை கார் சேவை தொடங்கப்பட்டு இருக்கின்றது.
சமீப காலமாக வாடகை வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் ரேபிடோ நிறுவனத்தின் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மற்ற நிறுவனங்களைவிட சற்று மலிவான கட்டணத்தில் இது வாடகைக்கு வாகனத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது கார்களையும் தன்னுடைய சேவையில் இணைக்க ஆரம்பித்து இருக்கின்றது.

விரைவில் நாடு முழுவதும் இந்த சேவையை அது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மலிவான விலையில் வாடகை வாகனங்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கும், நிலையான வருவமானத்தை எதிர்பார்க்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் எங்களின் இந்த சேவை உதவியாக இருக்கும் என ரேபிடோ தெரிவித்து இருக்கின்றது.
ரேபிடோ சேவையைப் பெறுவதற்கான செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரண்டிற்கும் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மற்ற ஓலா-ஊபர் செயலியைப் போலவே இதனையும் இன்ஸ்டால் செய்வது மிக மிக சுலபமானது ஆகும். மேலும் பயன்படுத்துவதும் சுலபம் ஆகும். இதேபோல், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சிறப்பு சலுகைகளையும் அவ்வப்போது ரேபிடோ வழங்கி வருகின்றது.

அந்தவகையில், அதன் பைக் சேவைக்கு பலதரப்பட்ட சிறப்பு சலுகைகளை ரேபிடோ வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வசிப்போர் மத்தியில் ரேபிடோவின் வாடகை வாகன சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. முதலில் பைக் டாக்சி சேவையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டதே இந்த ரேபிடோ ஆகும்.
இந்த நிலையிலேயே அதன் சேவையில் முதலில் ஆட்டோக்கள் இணைக்கப்பட்டன. தற்போது ஆட்டோவைத் தொடர்ந்து கார்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, போர்டர் செயலியைப் போல் ரேபிடோ அதன் சேவையில் டாடா ஏஸ் மற்றும் லோடு வேன் போன்ற வாகனங்களையும் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரத்தில், ரேபிடோ அதன் வாடிக்கையாளர்களை விரைந்து பிக்-அப் செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஓர் வாகனத்தை புக் செய்தால் டிரைவர் அதை அக்செப்ட் செய்யவே நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்த்து வைக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், புக் செய்த சில நிமிடங்களிலேயே வாகனம் வாடிக்கையாளரின் வீடு தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடகை வாகன சேவை நிறுவனங்கள் சில பகல் கொள்ளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு கிமீ தூர பயணங்களுக்கே 100 ரூபாயை கட்டணமாக கேட்கக் கூடிய சூழலை நம்மால் இங்கு பார்க்க முடிகின்றது. ஆகையால், கால் டாக்சி பயனர்கள் பலர் இந்த விஷயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கட்டணத்தை சீர்படுத்த வேண்டும் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications









