சாவி எடுத்து குடுக்க ரத்தன் டாடாவே ஷோரூம் வந்துட்டாரு! ஏன் தெரியுமா? இவர் பெயரை மட்டும் டாடா எப்பவும் மறக்காது
இந்தியாவே போற்றி வணங்கிய தொழில் அதிபர் ரத்தன் டாடா (Ratan Tata), உடல் நலக்குறைவால் சமீபத்தில் காலமானார். இதனால் நாடே கண்ணீர் கடலில் மூழ்கியது. ஒரு தொழில் அதிபரின் மறைவுக்கு மக்கள் இவ்வளவு கண்ணீர் சிந்தி இதற்கு முன் யாரும் பார்த்தது இல்லை. ரத்தன் டாடாவின் நல்ல மனதுதான் இதற்கெல்லாம் காரணம். இந்த நேரத்தில், ரத்தன் டாடாவின் பழைய வீடியோக்களை எல்லாம் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், டாடா நானோ (Tata Nano) கார்களை ரத்தன் டாடா வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. உண்மையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வீடியோ ஆகும்.

இந்தியாவின் முதல் டாடா நானோ காரை ரத்தன் டாடா தன் கையால் அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்த காட்சிகள் இந்த வீடியோவில் அடங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். அசோக் விச்சாரே (Ashok Vichare) என்பவர்தான், இந்தியாவில் டாடா நானோ காரின் முதல் உரிமையாளர் ஆவார்.
அதாவது முதன் முதலில் அவருக்குதான் டாடா நானோ கார் டெலிவரி கிடைத்தது. அதற்கு பிறகுதான், அடுத்தடுத்த வாடிக்கையாளர்களுக்கு டாடா நானோ கார்கள் டெலிவரி செய்யப்பட்டன. அசோக் விச்சாரே சில்வர் (Silver) கலரில் டாடா நானோ காரை வாங்கினார். இதே வீடியோவில், 2வது வாடிக்கையாளருக்கும் டாடா நானோ காரை டெலிவரி செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

2வது வாடிக்கையாளர் மஞ்சள் (Yellow) நிறத்தில் டாடா நானோ காரை தேர்வு செய்திருந்தார். ஆனால் ரத்தன் டாடா கையால் டெலிவரி பெற வந்தபோது, அசோக் விச்சாரேவின் சில்வர் கலர் டாடா நானோ கார் முன்பாகவே அவர் நின்றார். இதன் காரணமாக சற்று குழப்பம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ரத்தன் டாடாவே, அவருக்கு எந்த காரை டெலிவரி செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பிறகு மஞ்சள் கலர் என தெரியவந்ததும், அந்த கார் முன்பு நின்று ரத்தன் டாடாவும், அதன் உரிமையாளரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து கொண்டனர்.
ரத்தன் டாடா ஒரு முறை இந்திய குடும்பம் ஒன்று ஸ்கூட்டரில் 4 பேராக பயணம் செய்வதை பார்த்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஸ்கூட்டரில் பயணம் செய்த 4 பேரும் கடும் சிரமங்களுக்கு ஆளாயினர். இதன் காரணமாகவே மிகவும் குறைவான விலையில் இந்திய மக்களுக்காக கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ரத்தன் டாடா விரும்பினார்.
இதன் விளைவாக உருவானதுதான் டாடா நானோ கார். பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் விடாமுயற்சிகளுக்கு பிறகு, கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் டாடா நானோ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது.
ஆனால் தவறான விளம்பர யுக்தி மற்றும் தீ விபத்து சம்பவங்கள் போன்ற காரணங்களால், டாடா நானோ அதன் செல்வாக்கை இழந்தது. மிகவும் விலை குறைவான கார் என்று விளம்பரம் செய்வதற்கு பதிலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தவறுதலாக மிகவும் மலிவான கார் என்ற அர்த்தத்தில் டாடா நானோவை விளம்பரம் செய்து விட்டது.
இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நானோ மீது மிகவும் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக டாடா நானோ காரின் விற்பனை சரிவை சந்திக்க தொடங்கியது. இறுதியில் கடந்த 2018ம் ஆண்டு டாடா நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நானோ என்பது வெறும் கார் மட்டும் அல்ல. அது ரத்தன் டாடாவின் கனவு வாகனம். இந்த நேரத்தில் டாடா நானோ கார் புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். இதற்கு எங்களுடைய பதில் 'இல்லை' என்பதுதான்.
ஆம், டாடா நானோ கார் புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும், தற்போது வரை தென்படவில்லை. அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் இன்றைய காலகட்டத்தில், மிகவும் குறைவான விலையில் டாடா நானோ காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.


Click it and Unblock the Notifications








