கடைசியாக ரத்தன் டாடா ஓட்டிய பென்ஸ் காரில் இவ்வளவு மேட்டர் இருக்கா? இப்போது வைரலாகும் வீடியோ!!
ரத்தன் டாடா (Ratan Tata) மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. பிஸ்னஸில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரத்தன் டாடா மிகவும் எளிமையான வாழ்க்கையை விரும்பக்கூடியவராக இருந்தார். இதுவே அவரை இந்தியாவை தாண்டி உலகளவில் பிரபலப்படுத்தியது. இத்தகைய நபர் விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார் ஒன்றை பிசியான மும்பை சாலையில் ஒருமுறை ஜாலியாக ஓட்டிச் சென்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறது. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், டாடா குடும்பத்தின் வாரிசுமான ரத்தன் டாடா தனது 86வது வயதில் அக்டோபர் 9ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார். மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூறியதுபோல், ரத்தன் டாடாவின் அடையாளமே அவரது எளிமையான வாழ்க்கை ஆகும். குறிப்பாக, வயதான பிறகு அமைதியான வாழ்க்கையை ரத்தன் டாடா மிகவும் விரும்ப ஆரம்பித்தார். அப்படியிருந்த போதிலும், கடந்த 2023ஆம் ஆண்டில் மும்பையில் விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை அந்த வயதிலும் ரத்தன் டாடா ஓட்டிச் சென்றார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகியது. அப்போது ரத்தன் டாடா ஓட்டியது மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 என்கிற கன்வெர்டபிள் கார் ஆகும். அதாவது, இந்த காரின் மேற்கூரையை தேவைக்கேற்ப திறந்தும், மூடியும் கொள்ளலாம். வயது மூப்பின் காரணமாக, கடந்த பல வருடங்களாக ரத்தன் டாடா கார்களை ஓட்டாமல் இருந்தார். ஆனால், இந்த குறிப்பிட்ட மெர்சிடிஸ் காரை மட்டும் அவர் ஓட்டியது கவனத்தை ஈர்த்தது.

அதுமட்டுமின்றி, அந்த பயணத்தில் ரத்தன் டாடா ஓட்டியது இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரத்தை கொண்ட மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 கார் ஆகும். இந்தியாவில் கார்களில் ஸ்டேரிங் சக்கரம் ஆனது வலதுப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. ஆக, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 கார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாக இருக்கும். சில்வர் நிறத்தில் இருந்த இந்த காரினுள் ரத்தன் டாடாவுக்கு அருகே ஒருவர் அமர்ந்திருந்தார்.
இந்த பயணத்தில் ரத்தன் டாடா பயன்படுத்திய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 காரில் 5.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 306 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது ரத்தன் டாடாவுக்கு சொந்தமான காரா என்பது இப்போது வரையில் உறுதியாக தெரியவில்லை. ஆனால், ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக ஃபெராரி கலிஃபோர்னியா, காடில்லாக் எக்ஸ்.எல்.ஆர், கிறிஸ்லர் செப்ரிங் உள்ளிட்ட கார்கள் உள்ளன.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிறகு இந்த விலையுயர்ந்த கார்களை யார் பயன்படுத்த உள்ளனர் என்பது தெரியவில்லை. இத்தனை சொகுசு கார்களை வைத்திருப்பினும், ரத்தன் டாடாவை பெரும்பாலும் வெளியில் அவரது டாடா நானோ காரில் தான் அதிகமாக பார்க்க முடிந்தது. டாடா நானோ காரின் உருவாக்கத்திற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதனால்தான் ரத்தன் டாடா இந்த காரை பார்த்ததும் ஆசையாக ஓட்டினார். இவ்வாறான பவர்ஃபுல்லான காரை 85 வயதில் ஓட்டுவது எல்லாம் சாதாரணமான காரியம் அல்ல. கடந்த ஆண்டில் ரத்தன் டாடாவின் டிரைவிங்கை பார்த்து ஆச்சிரியப்பட்ட நாம் அதற்குள்ளாக அவரது மறைவை பார்க்க வேண்டியிருக்கும் என சுத்தமாக நினைத்து பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications








