டாடா நானோ கார் உருவானதற்கு காரணம் இதுதான்... வெளிவந்த புதிய தகவலால் இந்தியாவே பெருமைப்படுது...
டாடா நானோ கார் உருவாக்கப்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து வெளிவந்துள்ள புதிய தகவலால் இந்தியாவே பெருமிதம் அடைந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் நமக்கு பல்வேறு வழிகளில் உலக அளவில் பெருமையை தேடி தந்து கொண்டுள்ளது. இந்திய நிறுவனங்களிலேயே மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பது டாடாதான். சந்தேகத்திற்கு இடமின்றி இதனை உறுதியாக கூற முடியும். டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகின்றன.

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த 2 கார்களும் பெற்றுள்ளன. இது இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். டாடாவை தவிர வேறு எந்த இந்திய நிறுவனத்திடமும் இரண்டு 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்கள் இல்லை என்பதையும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அப்படிப்பட்ட டாடா நிறுவனத்திடம் இருந்து வெளிவந்த ஒரு கார்தான் நானோ. டாடா நானோ காரை பற்றிய அறிமுகம் கண்டிப்பாக யாருக்கும் தேவையில்லை. ரத்தன் டாடாவின் கனவு கார் அது. டாடா நானோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, ரத்தன் டாடாவை உலகமே ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தது.

ஏனெனில் அது இந்தியாவின் மலிவான கார் மட்டும் அல்ல. உலகிலேயே மலிவான விலை கார் என்ற பெருமை டாடா நானோவிற்கு கிடைத்தது. டாடா நானோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன. மலிவான விலையில் காரை அறிமுகம் செய்வோம் என்று இந்திய மக்களுக்கு ரத்தன் டாடா சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

அந்த சத்தியத்தை காப்பாற்றும் வகையில், சொன்னது போலவே மிகவும் மலிவான விலையில் டாடா நானோ விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணங்களால், டாடா நானோவின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. இன்னும் சொல்வதென்றால், டாடா நிறுவனத்தின் நானோ திட்டம் படுதோல்வியைதான் சந்தித்தது.

டாடா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு நானோ விற்பனையாகவில்லை. இதற்கு பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் எழுந்த அச்சங்களே முக்கியமான காரணம். டாடா நானோ கார் தீப்பிடிப்பதாக வந்த செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கின. அதுமட்டுமல்லாது டாடா நானோ கார் படுதோல்வியை சந்தித்ததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இருந்து குஜராத் மாநிலம் சனந்த் பகுதிக்கு மாற்றியது. இதில், ஏற்பட்ட தாமதங்களும் கூட ஒரு வழியில் நானோ காரின் படுதோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன. ஆனால் விற்பனை வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த சமயத்திலும், நானோவை தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என டாடா நிறுவனம் கம்பீரமாக கூறியது.

நானோ திட்டத்தில் டாடா நிறுவனத்திற்கு இருந்த உணர்வுபூர்வமான தொடர்பே இதற்கு காரணம். ஆம், அது ரத்தன் டாடாவின் கனவு கார். அப்படி இருக்கையில் உற்பத்தியை எப்படி நிறுத்துவது? எனினும் வேறு வழி இல்லாததால் நானோவின் உற்பத்தியை கடந்த 2018ம் ஆண்டு டாடா நிறுவனம் நிறுத்தி விட்டது. ஆனால் டாடா நானோ இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒரு தயாரிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

ரத்தன் டாடாவும் கூட நானோ காரை நினைத்து இன்னமும் பெருமைப்பட்டு கொண்டுதான் உள்ளார். ரத்தன் டாடா இந்திய மக்கள் பலருக்கும் முன்மாதிரி. மிக எளிமையான வாழ்க்கையை விரும்புபவர். Humans of Bombay என்ற பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதில், டாடா நானோ கார் குறித்து ரத்தன் டாடா பேசியுள்ளார்.

டாடா நானோ காரை நினைத்தும், அந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வது என்ற முடிவில் உறுதியாக முன்னோக்கி சென்றதற்காகவும் பெருமிதம் கொள்வதாக ரத்தன் டாடா கூறியுள்ளார். அத்துடன் நானோ காரை உருவாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது ஏன்? என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அவர் சொன்ன காரணம் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு முறை கனமழை பெய்த சமயத்தில், ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பைக்கில் பயணம் செய்தனர். அதை ரத்தன் டாடா பார்த்துள்ளார். இந்த காட்சிதான் டாடா நானோ கார் உருவாக காரணம். ''மாற்று இல்லாததால் தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கும் இந்த குடும்பங்களுக்கு நிறைய செய்ய வேண்டும்'' என்ற எண்ணத்தை ரத்தன் டாடாவிற்கு இந்த காட்சி ஏற்படுத்தியது.

அதனால் விடாப்பிடியாக நானோ காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்தார். பல்வேறு காரணங்களால் டாடா நானோ படுதோல்வியடைந்தாலும் கூட, இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் பலரின் சொந்த கார் கனவை நானோதான் நிஜமாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. நானோ குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








