ரூ1 லட்சத்திற்கு காரை கொண்டு வந்த மறைந்த ரத்தன் டாடா! சத்தியத்தை காப்பாற்ற என்னலாம் செய்தார் தெரியுமா?
டாடா குழுமத்தின் சேர்மனாக இருந்த ரத்தன் டாடா இன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 86 வயதான இவர் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவர். இந்தியாவின் குறைந்த விலை காரான டாடா நானோ கார் இவர் சிந்தனையிலிருந்த உருவானது தான். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் டாடா குழுமம் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்திய பொருளாதாரத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா தான். இவர் மற்ற தொழிலதிபர்கள் போல இல்லாமல் சற்று வித்தியாசமாக சிந்திக்கும் தன்மை கொண்டவர்.

ரத்தன் டாடா என்ற உடன் பலருக்கும் நினைவு வருவது அவர் உருவாக்கிய டாடா நேனோ கார் தான். இந்தியாவில் கார் வாங்க வேண்டும் என்று கனவில் இருந்த பலருக்கு அந்த கனவை நினைவாக்க உறுதுணையாக இருந்தது இந்த கார் தான். இந்த கார் உருவானதற்கு பின்னால் மிகப்பெரிய கதை ஒன்று இருக்கிறது. இந்த கதையை அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார். இது பலரை ஆச்சரியப்பட வைத்த சம்பவமாக இருக்கிறது.
கடந்த 2003ம் ஆண்டு ரத்தன் டாடா தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இவர் பயணம் செய்து கொண்டிருந்த சாலையில் ஒரே டூவீலரில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். நல்ல மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்கள் மழையில் நனைந்து கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்து ரத்தன் டாடாவிற்கு இந்திய மக்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள்? அவர்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் ஒரு நல்ல தரமான காரை உருவாக்க வேண்டும்.இதனால் அனைத்து மக்களும் காரில் பயணம் செய்ய முடியும். இது போன்ற மழை, வெயில் பிரச்சனை எல்லாம் இந்திய குடும்பங்கள் எளிதில் சமாளிக்க வேண்டும் என நினைத்தார்.
இதற்காக அவர் தனது ஆட்டோமொபைல் குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பல்வேறு கட்டமான ஆய்வுகளை செய்தா.ர் இறுதியாக இந்தியாவிலேயே குறைந்த விலையில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தன.இந்த காருக்கு டாடா நேனோ என பெயர் வைத்தார்கள்.
டாடா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் இந்தியா முழுவதும் இந்த அறிவிப்பு காட்டுத்தீப் போல வேகமாக பரவியது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கார் விற்பனைக்கு வர போகிறதா என பலரும் ஆச்சரியமாக கேட்டார்கள். இதனால் கார் வாங்கும் கனவில் இருந்த பலருக்கு தங்கள் கனவை நினைவாக்கிக் கொள்ளும் நேரம் வந்து விட்டதாகவே நினைத்தார்கள்.
ஆனால் டாடா குழுமம் இந்த காரை உருவாக்குவதில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்தது. அதிகரித்து வரும் ஸ்டீல் விலை மற்றும் டயர் விலை காரணமாக ரூபாய் ஒரு லட்சத்திற்கு குறைவான விலையில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒரு விஷயமாகவே இருந்தது. இருந்தாலும் டாடா குழுமம் பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு குறைவான விலையில் காரை உருவாக்கியது.
இருந்தாலும் டாடா நிறுவனம் இந்த காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது இதை ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் விற்றால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. ஆனால் டாடா நிறுவனம் ஏற்கனவே மக்கள் மத்தியில் உறுதி கொடுத்து விட்டதால் தனது நேனோ கார்களை தயாரித்து அதை நஷ்டத்தில் விற்பனை செய்வது என முடிவு செய்தது. இதனால் ரூபாய் ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஏகப்பட்ட மக்கள் கார் கனவுடன் இந்த காரை புக்கிங் செய்து வாங்கினார்கள். புக்கிங் செய்த மக்களுக்கு எல்லாம் டாடா நிறுவனம் தனது வாக்குறுதியை காப்பாற்றும்படி குறைவான விலையிலேயே கார்களை விற்பனை செய்தது. டாடா நிறுவனம் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தாலும், இந்த காரின் தயாரிப்பை நிறுத்தவில்லை. இந்த கார் அந்நிறுவனத்திற்கு ஒரு எமோஷனலான தயாரிப்பாக இருந்ததால், இந்த காரை தயாரித்து நஷ்டத்தில் விற்பனை செய்தது.
ஒரு கட்டத்தில் இந்த காரின் விற்பனை குறைந்த பிறகு தான் இந்த காரின் தயாரிப்பை நிறுவனம் நிறுத்தியது. அதுவரை இந்த கார் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான காராகவே இருக்கிறது. சாலையில் இன்றும் இந்த கார் செல்லும்போது பலரும் இந்த காரை திரும்பி பார்க்கும் வகையில் இந்த கார் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல இந்தியர்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது, அந்த எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்களது பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரத்தன் டாடா செயல்பட்டது மறக்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்தியர்கள் பலர் தங்கள் முதல் காராக டாடா நானோ காரை வாங்கியுள்ளார்கள். அவர்கள் எல்லாம் இன்று அவரது மறைவு நாளில் நிச்சயம் அவரை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பார்கள்.


Click it and Unblock the Notifications








