ரத்தன் டாடா சந்தித்த அவமானம்... ஃபோர்டு இருந்த இடமே காணோம்!! வேற லெவல் செய்கை
ரத்தன் டாடா (Ratan Tata) இறந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரத்தன் டாடா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் எண்ணிக்கை தான் இதற்கு சாட்சி ஆகும். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என்கிற 3 நிறுவனங்கள் டாடா க்ரூப்பின் கீழ் செயல்படுகின்றன. இதில் வெளிநாட்டு கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை ரத்தன் டாடா சொந்தமாக்கியது ஒரு சுவாரஸ்யமான கதை ஆகும்.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் அதன் மலிவான மற்றும் தரமான கார்களினால் பிரபலமானதாக உள்ளது. இப்படிப்பட்ட சொந்த நிறுவனத்தை வைத்துக் கொண்டு, விலையுயர்ந்த கார்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களை டாடா க்ரூப் சொந்தமாக்கியது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

டாடா க்ரூப்பின் இந்த நடவடிக்கைக்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, உலகளவில் ஆட்டோமொபைலில் டாடா க்ரூப்பின் செயல்பாடுகளை கொண்டு செல்வது. மற்றொன்று, அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்தை பழி வாங்குவது ஆகும். 1999ஆம் ஆண்டில் தனது பயணிகள் கார்கள் பிரிவை விற்பனை செய்வது குறித்து ஃபோர்டு உடன் ரத்தன் டாடா மற்றும் அவரது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாடா மோட்டார்ஸின் முதல் காரான டாடா இண்டிகா இந்தியாவில் மிக பெரிய வெற்றி பெற்ற கார்களுள் ஒன்று என்பதுதான் நமக்கு தெரியும். ஆனால், ஆரம்பத்தில் டாடா இண்டிகாவின் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், இண்டிகாவை அறிமுகம் செய்த 1 வருடத்திற்குள் தனது பயணிகள் கார்கள் பிரிவை மொத்தமாக விற்கும் முடிவிற்கு டாடா க்ரூப் தள்ளப்பட்டது. அதற்காகவே ஃபோர்டை டாடா அணுகியது.

ஆனால், ஃபோர்டு நிறுவனமோ நீங்கள் எல்லாம் எதற்காக பயணிகள் கார்கள் மார்க்கெட்டிற்கு வருகிறீர்கள் என கேட்டு ரத்தன் டாடாவையும், அவரது குழுவையும் அசிங்கப்படுத்தி விட்டது. வாங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அடிமாட்டு விலையில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார்கள் பிரிவை கேட்டனர். அது ரத்தன் டாடாவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, அங்கிருந்து அவர் கிளம்பிவிட்டார்.
அதன்பின்னர் தான் டாடா மோட்டார்ஸை கார்கள் பிஸ்னஸில் முன்னணி நிறுவனமாக வளர்க்க ரத்தன் டாடா ஆரம்பித்தார். அதேநேரம், ஃபோர்டு கொடுத்த அவமரியாதையும் ரத்தன் டாடாவின் மனதில் நீங்காத வடுவாக இருந்தது. சரியான நேரத்திற்காக காத்திருந்தார். 2008ஆம் ஆண்டில் அந்த சரியான நேரமும் வந்தது. ஃபோர்டால் நடந்த முடியாமல் அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்கள் விற்பனைக்கு வந்தன.

லக்சரியான ஸ்போர்ட்ஸ் கார்களை உருவாக்கும் நிறுவனமான ஜாகுவார் 1922ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதனை 1989இல் 250 கோடி டாலருக்கு ஃபோர்டு வாங்கியது. அதன்பின், கம்பீரமான & பிரம்மாண்டமான எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் பெயர்போன லேண்ட் ரோவர் நிறுவனத்தை 2000ஆம் ஆண்டில் 270 கோடி டாலருக்கு ஃபோர்டு வாங்கியது. ஆனால், பொருளாதார நெருக்கடியாலும், வேறு சில காரணங்களினால் இவை இரண்டையும் 2008இல் ஃபோர்டு விற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு வந்தது.
இதற்காக தான் காத்திருந்ததுபோல், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என இரு நிறுவனங்களையும் சேர்த்து வெறும் 230 கோடி டாலரில் ரத்தன் டாடா ஒப்பந்தத்தை முடித்தார். ஃபோர்டை பழி வாங்குவதற்காக வாங்கினாலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து தனது சொந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல் டாடா க்ரூப் வளர்க்க ஆரம்பித்தது. அதன் விளைவாக, அடுத்த 1 வருடத்தில் 2009ஆம் ஆண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 9 கோடி டாலர்கள் இலாபத்தை பதிவு செய்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1999இல் டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார்கள் பிரிவை அடிமாட்டு விலைக்கு கேட்ட ஃபோர்டு மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை அதே அடிமாட்டு விலையில் ரத்தன் டாடா வாங்கியது எல்லாம் வேற லெவல் காரியமாகும். அன்று ரத்தன் டாடாவை அவமானப்படுத்திய ஃபோர்டு இன்று இந்தியாவில் இல்லவே இல்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications









