உலகின் நம்பர் ஒன் பணக்காரர், ஆனால் இன்னமும் ஹோண்டா அக்கார்ட் தான்!! ஜெஃப் பெசோஸ், எளிமையின் சிகரம்!
சூப்பர் கார்களை பிடிக்காதவர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள். வாங்க முடியாது என தெரிந்தும் அதன் மீது அளவு கடந்த ஆசையை வைப்பார்கள்.

பில்லயன்களில் சொத்துகளை வைத்திருப்பவர்களே நம்மை வெறுப்பேற்றும் வகையில் அடிக்கடி லக்சரி கார்களை வாங்கி குவிப்பர். இருப்பினும் பில்லியனர்களிலும் சிலர் தங்களது பழமையான கார்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருவோரும் இருக்கின்றனர்.

தற்சமயம் சுமார் 207 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்திற்கு சொந்தகாரராக உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் ஜெஃப் பெசோஸ் இன்னமும் தனது பழமையான காரான ஹோண்டா அக்கார்ட்டை பயன்படுத்தி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

1994, புதியதாக திருமணம் முடித்து கொண்ட கையோடு தனது முந்தைய வேலையை கைவிட்டு அமேசான் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்க ஆயத்தமானார் இளம் ஜெஃப் பெசோஸ். அப்போது அவருக்கு வயது 30 தான்.
அப்போது அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் எளிமையானவை. புத்தகங்களை விற்பது மட்டுமே. அந்த சமயத்தில் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை பத்து மட்டும் தான்.

தனது 1987 செவி ப்ளாஸர் காரில் தான் புத்தக தொகுப்புகளை தபால் நிலையத்திற்கு ஜெஃப் பெசோஸ் எடுத்து செல்வாராம். புத்தகங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கட்டுக்கட்டாக இடம்பெயர்த்துவதற்கு ஃபோர்க்லிஃப்ட் வாகனம் ஒன்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அந்த சமயத்தில் பெசோஸிற்கு ஆசையாக இருந்துள்ளது.
ஆனால் அதன்பின் மூன்று வருடங்களில், அதாவது 1997இல் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த வேகமாக வளர்ச்சியின் போது தான் அமேசான் நிறுவனர் 1987 செவி ப்ளாஸர் காரில் இருந்து ஹோண்டா அக்கார்ட் காருக்கு மாறியுள்ளார்.

1999ல் அமெரிக்காவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்த பாப் சிமோனின் '60 நிமிடங்கள்'-இல் கலந்து கொண்ட ஜெஃப் பெசோஸிடம் நிருபர் சிமோன், ஹோண்டாவில் என்ன இருக்கிறது என கேட்டார். இதற்கு உடனே சிரித்த பெசோஸ், அப்போதே பில்லியன்களில் சொத்து மதிப்பை வைத்திருந்தாலும், "இது ஒரு நல்ல கார்" என கூறினார்.

கார் மட்டுமல்ல அந்த சமயத்தில் அமேசான் தலைமையகம் அமைந்திருந்த இடத்தில் இருந்து சிஇஓ அமரும் மேசை வரை அனைத்துமே மிகவும் எளிமையானதாக, ஒரு பில்லியனர் உபயோகப்படுத்துவது போன்றே இல்லாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து கேள்வியெழுப்பிய பாப் சிமோனுக்கு ஜெஃப் பெசோஸ் அசரடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார். அது என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டும். அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத விஷயங்களுக்கு செலவழிக்க கூடாது என்பதை இது காட்டுகிறது என்றுள்ளார்.
அதாவது வணிகத்தை பெருக்குவது மட்டுமே எங்களது ஒரே இலக்கு என்பதை கூறுவதுபோல் இந்த கூற்று அமைந்துள்ளது. அமேசானின் வளர்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், நிறுவனர் ஜெஃப் பெசோஸின் இந்த மனநிலையும் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications








