இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா?
வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை அதன் உரிமையாளரிடம் இருந்து பெற்ற மாருதி நிர்வாகம் அதனை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த காரின் உரிமையாளரான ஹர்பாலுக்கு, காரை வழங்கிய இரு பெரும் தலைவர்கள் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமையாக்கி ஆண்டுக்கொண்டிருந்தபோது, ஆங்கிலேயர்கள் மீதும், அவர்களின் தயாரிப்புகள் மீதும் கடுமையான எதிர்ப்பை இந்தியர்கள் காட்டி வந்தனர். அதேசமயம், விடுதலைக்கு பின் வெளிநாட்டு தயாரிப்புகள் மீது இந்தியர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதில், குறிப்பாக பல செல்வந்தர்கள் வெளிநாட்டு கார்கள் மீது அளவுகடந்த மோகம் வைத்தனர். இது தற்போதுவரை குறைந்தபாடில்லை.
இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது வாகனங்களை இந்தியாவில் விற்று கொல்லை லாபம் அடைந்தனர். இதற்கு முடிவுக்கட்டும் விதமாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வாகனங்கள் இறக்குமதிக்கு பல மடங்கு வரியை விதித்து உத்தரவிட்டார். மேலும், வெளிநாட்டு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு தொழிற்சாலையை தொடங்கவும் விரும்பினார்.

இதைத்தொடர்ந்து, ஜப்பானின் சுஸுகி நிறுவனமும், இந்தியாவின் மாருதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. அதன்படி, 1983ம் ஆண்டு மாருதி800 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தயாரான முதல் கார் என்பதால் இதனை வாங்க பல ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்தார்கள். அப்போது, நாட்டின் அனைத்து மாநில வாசிகளில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வேலையில், டெல்லியின் தென் பகுதியிலுள்ள கிரீன் பார்க்கில் வசிக்கும் ஹர்பால் சிங்கிற்கு அடித்தது அந்த அதிர்ஷ்டம்.
தேசத்தின் முதல் தயாரிப்பு என்பதால் கார்களை வாடிக்கையாளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை கோலகமாக திருவிழாவைப்போல் அமைத்திருந்தது மாருதி நிர்வாகம். முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான நபர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிர்ஷ்டசாலியான ஹர்பாலிடம், கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று மாருதி 800 தயாரிப்பின் முதல் கார் சாவியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஹர்பால் சிங்குடன், இந்திரா காந்தியின் மகனான ராஜீவ் காந்தி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால், ஹர்பால் முதல் கார் பெறும் நிகழ்ச்சிக்கு ராஜீவ் காந்தியும் வந்திருந்தார். அப்போது, தம் தாயின் கையால் சாவியை பெற்று மேடை இறங்கிய ஹர்பாலை கட்டித் தழுவி ராஜீவ் காந்தி மகிழ்ந்துள்ளார்.
ஹர்பால் சிங், இந்த காரை பெற்றது முதல் மற்ற எந்த காரையும் பயன்படுத்தாமல் இருந்துள்ளார். மாருதி 800க்கு பின் வந்த மாடலான சென் மாடல் காரை வாங்க நண்பர்கள் அறிவுறுத்தியும், அதனை மறுத்துள்ளார் ஹர்பால். இந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஹர்பால் இறந்துள்ளார். அவரது இறப்புக்கு முன்பு வரை 800 அவரது இல்லத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

அதன்பின், ஹர்பாலின் மனைவி குல்ஷன்பிர் கௌர் மாருதி 800யை சிறிது காலம் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், ஹர்பால் தவரிய இரண்டு வருடங்களிலேயே குல்ஷன்பிரும் மறைந்தார். இதன் பிறகு, அவர்களது கார் பராமரிப்பின்றி துருபிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த சூழலில், கடந்த 2008ம் ஆண்டு மாருதியின் 25வது ஆண்டு விழாவுக்காக, அந்த காரை மாருதி நிர்வாகம் கொண்டுச் சென்றது. பின்னர், வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் முதல் தயாரிப்பை பராமரிக்க யாரும் இல்லாத காரணத்தால், ஹர்பால் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மாருதி நிர்வாகம் வாங்கிச் சென்றது.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க காரை மாருதி நிர்வாகம் ஏற்று புதுப்பித்துள்ளது. புத்தம்புது பொலிவுடன் இருக்கும் அந்த காரின் புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி உள்ளன.

இத்தகைய பெருமைக் கொண்ட இந்த கார், இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற அந்தஸ்தையும் பல ஆண்டுகளாக சூடி வந்தது. அதேபோல, இந்தியாவின் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த 2வது காராகவும் இது இருந்தது. ஸ்டைல், செயல்திறன், நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்ட பல அம்சங்களை ஒரே காரில் அதுவரையில் இந்தியர்கள் எந்த காரிலும் கண்டிருக்க முடியாது.
பலருக்கு கார்கள் மீதான ஈர்ப்பை அளித்ததே மாருதி 800 என்றுகூட கூறலாம், அந்த அளவிற்கு முந்தைய தலைமுறையின் லட்சக்கணக்கானவர்களுடன் உறவாடிய கார் இது.


Click it and Unblock the Notifications








