உயிர்கள் பறிபோவதை ஏற்று கொள்ள முடியாது... உடனே ரத்து பண்ணுங்க... ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்து மணிக்கு 120 கிலோ மீட்டர்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு வெளியிட்ட உத்தரவு தொடர்பான தகவல்களை நீங்கள் கேள்விபட்டிருக்க கூடும். இந்த அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்து மணிக்கு 80 கிலோ மீட்டர்களாக குறைக்கப்பட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சாலைகளில் நடைபெறும் பெரும்பாலான விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணம் என நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நீதிபதி கிருபாகரன் (ஓய்வு பெற்று விட்டார்) மற்றும் நீதிபதி தமிழ் செல்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ச் வேக வரம்பு தொடர்பான தங்களது கருத்துக்களை விரிவாக தெரிவித்துள்ளது.

''சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக இருக்கும் நிலையில், சாலை உள்கட்டமைப்புகளில் செய்யப்படும் மேம்பாடும், இன்ஜின் தொழில்நுட்பமும் சாலை விபத்துக்களை எப்படி குறைக்கும் என்பது தெரியவில்லை'' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

வேக வரம்பு தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பை ஏற்று கொள்வதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். சாலை உள்கட்டமைப்பில் செய்யப்படும் மேம்பாடு மற்றும் இன்ஜின் தொழில்நுட்பம் ஆகியவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில், நிபுணர்கள் குழு வேக வரம்பை நிர்ணயம் செய்ததாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்று கொள்ள மறுத்த நீதிபதிகள், ''உண்மையில் சிறப்பான இன்ஜின் தொழில்நுட்பம் அதிவேகத்திற்கு காரணமாகிறது. இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன'' என்றனர். வேக வரம்பை மீறுபவர்களை பிடிப்பதற்கு, அதிநவீன தொழில்நுட்பங்களை அதிகாரிகள் பயன்படுத்த தொடங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேக வரம்பை மீறும் ஓட்டுனர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ''சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேகத்தில் பயணிக்கும் இன்ஜின்களை கொண்ட வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடக்காத வகையில், ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றனர்.

ஒரு சாலை விபத்து வழக்கு விசாரணையின்போது இவை அனைத்தும் நடந்தன. சென்னை உயர் நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருக்கும் நிலையில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, வாகனங்களின் வேக வரம்பை உயர்த்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு ஆய்வு கூட்டத்தின்போது கூட, சாலைகளின் வகையை பொறுத்து, வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 20 கிலோ மீட்டர் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைகளை வழங்கினார். வேக வரம்புகளில் மாற்றம் செய்யும்படி தனது துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டு கொண்டார்.

விரைவான போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் என்பதால், வாகனங்களின் வேக வரம்பை அதிகரிப்பதில் அமைச்சர் நிதின் கட்காரி ஆர்வம் காட்டியிருக்கலாம். ஆனால் அதிவேகம் எப்போதும் ஆபத்தானது என்பதையும் நாம் மறுத்து விட முடியாது. இந்தியாவில் தினசரி நடைபெறும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது.

இதற்கிடையே விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் வகையிலும், தரமாகவும் சாலைகளை கட்டமைப்பதில் ஒன்றிய அரசு தற்போது மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறது. அத்துடன் வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலும் ஒன்றிய அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








