மாடுகளின் கழுத்தில் ஏன் மஞ்ச கலர் ஸ்டிக்கர் ஒட்றாங்க தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா
உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஒரு வகையில் மாடுகள் போன்ற கால்நடைகளும் இதற்கு காரணமாக இருக்கின்றன. வாகனங்களின் குறுக்கே திடீரென வந்து விடுவதால், அவை சாலை விபத்துக்களுக்கு காரணமாகின்றன.
இது வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, கால்நடைகளுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பனி காலங்களில் கால்நடைகள் வருவது தெரியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர். இந்த பிரச்னையை தடுப்பதற்காக இந்தியாவில் வித்தியாசமான முயற்சி ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் (Reflective Stickers) அணிந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கலாம். இந்த ஸ்டிக்கர்கள், மனிதர்கள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்துகின்றன. தற்போது இந்த ஸ்டிக்கர்கள் மாடுகளின் கொம்புகளிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.
அத்துடன் மாடுகளின் கழுத்துக்களிலும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரில் தற்போது 50க்கும் மேற்பட்ட மாடுகளின் கொம்புகளில், மஞ்சள் நிற ஒளிரும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம் பனி பொழியும் சமயங்கள் மற்றும் இரவு நேரங்களில் மாடுகளால் நிகழும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என நம்பப்படுகிறது. நொய்டா நகரை சேர்ந்த ஸ்மார்ட் (SMART - Sophie Memorial Animal Relief Trust) என்ற அமைப்பு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பை சேர்ந்த காவேரி ராணா பரத்வாஜ் கூறுகையில், ''பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களுடன், ஒளிரும் தன்மை கொண்ட பெயிண்ட்களையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். சாலைகளிலும், மிதிவண்டிகளிலும் இந்த பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை நாம் பார்த்திருப்போம். அதை பார்த்த பின்னர், இந்த ஸ்டிக்கர்களை மாடுகளிலும் பயன்படுத்தினால் என்ன? என்ற ஐடியா எங்களுக்கு வந்தது.
இது வாகன ஓட்டிகளுக்கும், மாடுகளுக்கும் நன்மை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக இந்த முயற்சியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். பொதுவாக குளிர்காலத்தில் பனி காரணமாக அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும். இதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இந்த முயற்சி.
நாங்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஒன்று, 5 மாடுகள் மீது மோதியது. எனவே இன்னும் அதிக மாடுகளை கண்டறிந்து, அவற்றில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவோம்'' என்றார். ஸ்மார்ட் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பனி காலம் தொடங்கவுள்ளதால், இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கைகயை எடுக்க அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன் வரலாம். மாடுகளின் உரிமையாளர்களே கூட இந்த நடவடிக்கையை எடுக்கலாம். இதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கையை ஓரளவிற்கு குறைக்க முடியும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








