புது வாகனங்களின் ஆர்டிஓ பதிவு நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! காரணம் தெரிந்தால் நிச்சயம் கோபமடைவீர்கள்..
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புதிய வாகனங்களுக்கான பதிவினை ஆர்டிஓ அலுவலகங்கள் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயர்பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டினை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நாடு முழுவதும், புதிய வாகனங்களுக்கான பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தி இந்து ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போலி நம்பர் பிளேட்டுகளை ஒழிக்கும் விதமாக, வாகனங்களில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டினைப் பொருத்துவது கட்டாயம் என கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
அதேசமயம், மத்திய அரசின் இந்த திட்டமானது, கடந்த 2001 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை இந்த திட்டம் முழுமையான அளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

எனவே, இத்திட்டத்தை கட்டாயம் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மாதம், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், சுற்றறிக்கை ஒன்றை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தது.
அதில், ஏப்ரலம் 1ம் தேதிக்கு பின்னர் விற்பனையாகும் அனைத்து வாகனங்களிற்கும் உயர் பாதுகாப்புக் கொண்ட நம்பர் பிளேட்டினைப் பொருத்துவது கட்டாயம் என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து முன்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், மோட்டார் விதிகள் 1989 மற்றும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் விதிகள் 2001 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு அதன்மீதான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

இக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் இந்திய வாகன ஆய்வு மையங்கள், மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனங்கள், வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் முக்கிய பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்தான், ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான பதிவு மட்டும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு எண்ணிற்கான சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டநிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை அரசு வழங்காத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆர்டிஓ தரப்பில் கூறப்படுகிறது.

அதேசமயம், ஏப்ரலுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாகனங்களின் பதிவு வழக்கம்போல் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், அனைத்து வாகனங்களுக்குமான பதிவுகளும் நடைபெற்று வருகின்றன.

ஏனென்றால், இந்த மாநிலங்கள் மத்திய அரசின் 'வாஹன்' தளத்தைப்போன்று, அந்தந்த மாநிலங்களுக்கான தனித்துவமான டேட்டா பேஸ்களை இயக்கி வருகின்றன. ஆகையால் இங்கு தங்குதடையின்றி வாகனப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
அரசின் இந்த கெடுபிடியால், ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களை வாங்கியவர்கள் வாகனத்தை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டானது அலுமினியத் தகட்டால் உருவாக்கப்பட்டு, அகற்ற முடியாத வகையில் பொருத்தப்படும். இதனை ஒரு முறை அகற்றிவிட்டால் மீண்டும் மறுமுறை பயன்படுத்த முடியாது. இத்துடன் அந்த நம்பர் பிளேட்டில், அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதனை கிழிக்கவோ, அழிக்கவோ முடியாது.

ஹாலோகிராம் ஸ்டிக்கருக்கு கீழே 'ஐஎன்டி' என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதற்குக் கீழே அல்லது பக்காவட்டில், வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக அல்லாமல் அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். இந்த எழுத்தினை அழித்தாலும், அதன் பின்னணியில் உள்ள அச்சு அப்படியே இருக்கும்.

இதையடுத்து, மத்திய அரசின் 'வாஹன்' என்ற இணையதளத்தில், அந்த குறிப்பிடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் குறித்த தகவலும், வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களும் பிரத்யேகமாக பதிவேற்றப்படும்.
இவ்வாறு, ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டைப் பெறும் வாகனம் குறிப்பிட்ட தூரத்தில் வரும்போதே, வாகனம் குறித்த அனைத்து தகவலையும், குறிப்பிட்ட கருவியின் மூலம் போலீஸாரால் தெரிந்துக்கொள்ள முடியும். இதனால், திருடப்பட்ட வாகனங்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.


Click it and Unblock the Notifications