கார்களுக்கான புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ!
வாகன உரிமையாளர்களுக்காக ஆட்டொமொபைல் டெலிமேடிக்ஸ் எனும் புதிய வசதியை அளிக்க ரிலையன்ஸ் ஜியோ அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்திய டெலிகாம் துறையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஆட்டொமொபைல் துறையில் களம் காண இருக்கிறது. வாகன உரிமையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ, இதற்காக அமெரிக்காவின் ஏர்வயர் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துள்ளது.

ஜியோ - ஏர்வயர் நிறுவனங்கள் இணைந்து ‘கனெக்டட் கார் டிவைஸ்' என்ற தொழில்நுட்ப சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன. இதன் மூலம் டெலிகாம் துறை மட்டுமல்லாது அடுத்த தலைமுறை வளர்ச்சிகளில் ஒன்றான டெலிமேடிக்ஸ் துறையில் கால் பதிக்கிறது ஜியோ.

இந்த சாதனம் ஜியோ சிம் கொண்டு செயல்படும் வகையிலானது. இதன் மூலமாக வாகன உரிமையாளர்கள் பல்வேறு நன்மைகளை அடைய உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோவின் தங்கு தடையற்ற 4ஜி எல்டிஇ நெட்வொட்க் மூலம் செயல்படும் இந்த கனெக்டட் கார் டிவைஸ் சாதனம், காரின் OBD-II போர்டுடன் இணைக்கப்படுகிறது. இதன் காராணமாக கார் இருப்பிடம், காரின் வேகம், காரை கட்டுப்படுத்தும் அமைப்புகள், காரின் எரிபொருள் அளவு, வைஃபை போன்ற பல வசதிகள் கிடைக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் ஏர்வயர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இச்சாதனத்தை ஜியோ நெட்வொர்க் கொண்டு இணைப்பு பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இத்தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட கார்கள் ஸ்மார்ட் கார்களாக வலம் வர இருக்கிறது. இதனை இந்திய சந்தையில் விற்பனை செய்ய பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஜியோ.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர்வயர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் தெபசிஸ் பாக்சி கூறும்போது, "ஜியோவுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி காரணமாக எங்களது கனெக்டட் கார் டிவைஸ் தொழில்நுட்பம் முதல்முறையாக ஒரு நாடு முழுவதும் சென்றடைய இருக்கிறது" என்றார்.

இது வாகனம் பற்றிய தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்க இருக்கிறது, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கனெக்டட் கார் டிவைஸை எளிதாக உபயோகப்படுத்தும் அளவுக்கு மொபைல் ஆப் ஆகவும் உருவாக்கி வருகின்றனர். கார் திருட்டை கண்டறியும் இந்த செயலி, கார் திருடப்படும் போது அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்யும், மேலும் காரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை செயலி காட்டிவிடுவதால் திருடப்பட்ட காரை எளிதாக மீட்டு விடலாம்.

ஏற்கெனெவே வைஃபை சாதனத்தை சந்தைப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், இந்த புதிய தொழில்நுட்ப சாதனத்தை ரூ.2000 என்ற விலையில் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2017 ஹோண்டா சிட்டி காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








