உடனே கழட்டீருங்க... இனிமேல் உங்க வண்டில இது இருந்தா காலி... சென்னை ஐகோர்ட் உத்தரவால் களத்தில் இறங்கும் போலீஸ்!
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதை, பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதற்கு ஒன்றிய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனினும் இந்த தடையை பொருட்படுத்தாமல் பலர் தொடர்ந்து தங்களது வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பரை பயன்படுத்தி வந்தனர்.

எனவே தமிழ் நாடு காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தனர். அந்த சமயத்தில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதேபோன்றதொரு நடவடிக்கையை மீண்டும் எடுப்பதற்கு தமிழ் நாடு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுதான் இதற்கு காரணம். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் பாதசாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதன் காரணமாகதான் ஒன்றிய அரசு எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு தடை விதித்தது.

மேலும் வாகனங்களின் முன் பகுதியில்தான் விபத்துக்களின்போது ஏர்பேக் வேலை செய்வதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார்கள்தான், மோதலை உடனடியாக கண்டறிந்து, ஏர்பேக்குகளை விரிவடைய செய்யும். ஆனால் இந்த இடத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்படுவதால், மோதலின் தாக்கத்தை சென்சார்கள் உணராமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே ஏர்பேக் இருந்தாலும், விபத்துக்களின்போது வேலை செய்யாது. வாகனங்களின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் உயிருக்கும் இது ஆபத்தானது. எக்ஸ்ட்ரா பம்பர் தடை செய்யப்பட்டிருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, தடையை பொருட்படுத்தாமல் பலர் தொடர்ந்து எக்ஸ்ட்ரா பம்பர்களை பயன்படுத்தி வந்தனர்.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தடை செய்யப்பட்ட எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு கடுமையான அதிருப்தியை தெரிவித்தது.

பொதுமக்கள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றவர்களின் வாகனங்களிலும் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்படுகிறது என நீதிமன்றம் கவலையும் தெரிவித்தது. இதையடுத்து எக்ஸ்ட்ரா பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இல்லாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை செய்தனர். இதன் பின்னர் எக்ஸ்ட்ரா பம்பர்களை தாங்களாகவே முன் வந்து பலர் அகற்றி விட்டனர். எனினும் எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 21ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது எக்ஸ்ட்ரா பம்பர்களால், வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

அத்துடன் பம்பர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பருக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும், அதனை நீக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எனவே தமிழ் நாட்டில் வரும் நாட்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்றி விடுவதுதான் உங்கள் பர்சுக்கும், பாதுகாப்பிற்கும் நல்லது.


Click it and Unblock the Notifications








