இனிமேல் உங்க வண்டில இது இருந்தா அவ்ளோதான்... காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் திடீர் உத்தரவு... என்னனு தெரியுமா?
காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில், சன் ஃபிலிமும் (Sun Film) அடங்கும். இந்த சூழலில், கார்களில் ஒட்டப்பட்டுள்ள சன் ஃபிலிம்களை அகற்றுவதற்கு, 60 நாட்கள் கால அவகாசம் வழங்கும்படி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த கால அவகாசம் முடிவதற்குள் கார் உரிமையாளர்கள் சன் ஃபிலிமை அகற்றி விட வேண்டும். அவ்வாறு சன் ஃபிலிம் அகற்றப்படாத வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே உங்கள் காரில் சன் ஃபிலிம் இருந்தால், அதனை உடனடியாக அகற்றி விடுவது நல்லது.

இந்தியாவில் கார்களில் சன் ஃபிலிம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் சன் ஃபிலிம் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதால், இனி வரும் நாட்களில் போக்குவரத்து துறை அதிகாரிகளின் பிடி இறுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் சமீப காலமாக சன் ஃபிலிம் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. பொதுவாக கார்களின் ஜன்னல்கள் மற்றும் விண்டுஷீல்டுகளில் (கண்ணாடி) சன் ஃபிலிம் ஒட்டுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அத்தகைய கார்களை கண்டறிவதற்காக சூரத் நகர காவல் துறையினர் சிறப்பு சோதனையை மேற்கொண்டனர்.

இந்த சிறப்பு வாகன சோதனை கடந்த செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி, 6ம் தேதி நிறைவடைந்தது. இந்த சோதனையில் மொத்தம் 2,531 கார்கள் பிடிபட்டன. இந்த கார்களின் ஜன்னல்கள் மற்றும் விண்டுஷீல்டுகளில் சன் ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்தது. எனவே அந்த கார்களின் உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

ஒட்டுமொத்தமாக 12.65 லட்ச ரூபாயை காவல் துறையினர் அபராதமாக வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சூரத் நகரில் தற்போது கார் உரிமையாளர்கள் பலரும் அவசர அவசரமாக சன் ஃபிலிமை அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''சோதனை நடைபெற்ற 5 நாட்களிலேயே, சன் ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்த 2,531 கார்களை காவல் துறையினர் கண்டறிந்தனர். அந்த கார்களின் உரிமையாளர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. சன் ஃபிலிம் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக எங்களின் நடவடிக்கை தொடரும்'' என்றனர்.

ஒரு விபத்து சம்பவம் எதிரொலியாக இந்த சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட காரில் சன் ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்தது. எனவே காரின் உட்புறத்தை காவல் துறை அதிகாரிகளால் பார்க்க முடியவில்லை.

எனவே டிரைவரை அடையாளம் காண முடியாமல் போய் விட்டது. எனவேதான் சூரத் நகர காவல் துறையினர் சன் ஃபிலிம் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த பல வருடங்களுக்கு முன்பே சன் ஃபிலிம்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டு விட்டது.

கார்களுக்கு உள்ளே நடைபெறும் குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த காரணத்தால்தான் சன் ஃபிலிம்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. சன் ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்தால் காரின் உள்ளே என்ன நடக்கிறது? என்பது வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது. இது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகி போனது.

எனவே சன் ஃபிலிம் ஒட்டிக்கொண்டு குற்ற செயல்களை அதிகளவில் அரங்கேற்ற ஆரம்பித்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாகவே சன் ஃபிலிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பலர் தொடர்ந்து சன் ஃபிலிம்களை பயன்படுத்தி வருகின்றனர். வரும் நாட்களில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








