சபரிமலை செல்வோருக்கு ராயல் எண்ட்பீல்டு பைக்... ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயம் பெருகி வருகிறது. இதனால் நகர்புறங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஷாப்பிங், கரண்ட் பில், போன் பில், பஸ், ட்ரெயின் உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் போன்ற தங்களது தேவைகள் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே முடித்து விடுகின்றனர்.

டிஜிட்டல் மயத்தால் கிடைக்கக்கூடிய வசதிகளில் வாடகை பைக்கும் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்த வாடகை பைக்கை சபரிமலைக்கு செல்வோர் கேரளாவில் உள்ள செங்கண்ணூர் இரயில் நிலையத்தில் இருந்து பம்பா வரை ஓட்டி செல்ல தெற்கு இரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தெற்கு இரயில்வே நிர்வாகம், செங்கண்ணூர் மட்டுமின்றி திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட கேரளாவில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த வாடகை பைக் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கேரளாவில் துவங்கி தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட அனைத்து முக்கிய இரயில் நிலையங்களிலும் இந்த வாடகை பைக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் இரயில்வே பிரிவு முதன்மை அதிகாரி பாலமுரளி கூறுகையில், செங்கண்ணூரில் செயல்படுத்தப்பட்டுள்ள வாடகை பைக்குகள் கொச்சியை மைய இடமாக கொண்ட காஃபிரைட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.

சபரிமலைக்கு இரயில் மூலமாக செல்வோருக்கு செங்கண்ணூர் முதன்மை இரயில் நிலையமாக உள்ளதால் இந்த திட்டம் முதலில் இந்த இரயில் நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு செல்வோர் ராயல் எண்ட்பீல்டு புல்லட் மற்றும் ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட 10 புல்லட் பைக்குகளை செங்கண்ணூர் இரயில் நிலையத்தில் இருந்து ஓட்டி செல்ல முடியும்.

இத்தகைய பைக்குகளை ஒரு நாள் முழுவதும் அல்லது 200 கிமீ ஓட்டி செல்ல ரூ.1,200 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மேல் 1 மணிநேரம் தாண்டினால் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும். அதேபோல் 200 கிமீ-க்கு மேல் 1 கிமீ சென்றால் கூடுதலாக ரூ.6 செலுத்த வேண்டும்.

ஏற்கனவே கூறியதுபோல், இத்தகைய வாடகை பைக்குகள் எர்ணாக்குளம், திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா மற்றும் திரிச்சூர் உள்ளிட்ட கேரளாவில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் இன்னும் 1 மாத காலத்திற்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், காஃபிரைட்ஸ் உடன் மேலும் சில நிறுவனங்களும் வாடகை பைக்கை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பாலமுரளி கூறியுள்ளார்.

இந்த வாடகை பைக் திட்டம் குறித்து செங்கண்ணூரில் வாடகை பைக்கை வழங்கி வரும் காஃபிரைட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் சனிஷ் ராஜப்பன் கூறுகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 500சிசி ராயல் எண்ட்பீல்டு பைக்குகளை செங்கண்ணூர் இரயில் நிலையத்தில் வழங்கியுள்ளோம். இரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின் இன்னும் சில நாட்களில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளையும் வழங்கவுள்ளோம் என கூறினார்.

வாடகை பைக் மட்டுமின்றி வாடகை காரும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ள இரயில்வே அதிகாரி பாலமுரளி, வாடகை கார் குறித்து கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் மட்டும் வாடகை கார் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த திட்டமும் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார்.

சபரிமலை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதற்காக இத்தகைய வாடகை பைக்குகள் வழங்கப்பட்டிருந்தாலும் இவற்றின் வாடகை சிறிது அதிகமாகவே உள்ளது. தெற்கு இரயில்வேயின் இந்த திட்டம் பயணிகளிடையே எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








