சுதந்திர தினத்தன்று 'புல்லட்'டுகளில் ஓர் சுதந்திரமான பயணம்!!
சுதந்திரமாக பயணிக்க விரும்புவோர், சிறந்த போக்குவரத்து சாதனமாக கருதுவது பைக்குகளைத்தான். அதனால்தான், பல லட்சம் போட்டு கார் வாங்குவதற்கு பதிலாக, இளைஞர்கள் பலர் இன்று உயர்வகை பைக்குகளை தேர்வு செய்து வாங்குகின்றனர்.
இந்தநிலையில், சுதந்திர காற்றுக்கு காரணமாகிய நாளாம், சுதந்திர தினத்தன்று ஓர் சிறப்பான பைக் பயண வாய்ப்பை ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்கள் பெற்றனர். பெங்களூரை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின கொண்டாட்டமாகவும், தனது 10ம் ஆண்டு கொண்டாட்டமாகவும், ஓர் சிறப்பு பைக் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மசினகுடி மற்றும் ஊட்டி ஆகிய ஊர்களை இலக்காக கொண்டு நடந்த இந்த பைக் பயணம் மிகச்சிறப்பான அனுபவத்தை பைக் உரிமையாளர்களுக்கு வழங்கியது. டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் ராஜ்கமல், இந்த பைக் பயணத்தில் பங்கேற்றார். இந்த பைக் பயணத்தில் 60க்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளுடன் பங்கு கொண்டனர்.

01. குழுமிய ரைடர்கள்
பெங்களூர், பேலஸ் கிரவுண்ட் அருகில் அமைந்திருக்கும் சிவிஎஸ் மோட்டார்ஸ் ஷோரூமிருந்து பயணம் புறப்பட்டது. இதற்காக, கடந்த சனிக்கிழமை அதிகாலையிலேயே தங்களது ஆஸ்தான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் குழுமினர்.

02. சிறு குழுக்கள்
மோட்டார்சைக்கிள் ரைடர்களை எளிதாக ஒருங்கிணைக்கவும், அடையாளம் காணவும் வசதியாக சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதற்கான தேர்வு செய்யப்பட்ட அணித் தலைவர்கள் தலைமையில் பைக் பயணம் புறப்பட்டது.

03. அணிவகுப்பு
பொழுது புலர்ந்த வேளையில், நீண்ட அணிவகுப்புடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள், தங்களது அதிர்வேட்டு சப்தத்துடன் சாலையை ஆக்கிரமித்தன. ஒரேநேரத்தில், பல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் சாலையில் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அத்துடன், அணித் தலைவர்களின் பின்னால் அணிவகுத்து மோட்டார்சைக்கிள்கள் சென்றன.

04. சிறிய இடைவேளை
சாலையில் தடதட சப்தத்துடன் அணிவகுத்து சென்றபோது மட்டுமல்ல, காலை சிற்றுண்டிக்காக ரைடர்கள் சென்றபோது, ஒரே இடத்தில் தங்கள் உடல் சூட்டை தணிப்பதற்கு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் நம் கண்களுக்கும், கேமரா கண்களுக்கும் விருந்து படைத்தன. இப்போது, இந்த படத்தின் மூலமாக உங்களது கண்களுக்கும் விருந்து படைக்கிறது.

05. பாதுகாப்பு
பைக் பயணத்தில் கலந்து கொண்ட ரைடர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களுடன் கலந்து கொள்ள சிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவுறுத்தியிருந்தது. மேலும், பைக் பயணத்தின்போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வழிகாட்டு முறைகள் குறித்தும் பைக் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

06. முதுமலை வழியாக..
காலை சிற்றுண்டி முடிந்து கர்நாடக எல்லையை கடந்து, முதுமலை புலிகள் சரணாலயம் வழியாக, தமிழக மண்ணை தொட்ட ராயல் என்ஃபீல்டு குழுவினர், தங்களது இலக்கான மசினகுடி நோக்கி பயணித்தனர்.

07. மசினகுடி அழகு
முதுமலை சரணாலயப் பகுதியை தாண்டியவுடன், மலைகளும், மரங்களும் மிரட்டிய அழகில் வியந்துகொண்டே மசினகுடியை ஆக்கிரமித்தன ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பயணக் குழு. அங்குள்ள வைல்டு இன் ரிசார்ட்டில் அடைந்த குழுவினருக்கு, அந்த ரிசார்ட்டின் மதிய உணவின் சுவையும் நிறைவையும், களைப்பையும் தந்தது.

08. சுதந்திர தின கொண்டாட்டம்
மசினகுடியிலுள்ள, வைல்டு இன் ரிசார்ட்டில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் அனைவரும் பங்கெடுத்தனர். அங்கு தேசிய கொடிக்கு மரியாதை செய்ததுடன், தேசிய கீதத்தையும் பாடி தங்களது உற்சாகத்தையும், சுதந்திர தின நாள் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

09. கொண்டாட்டம்
சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிரந்த இரவு விருந்து நிகழ்ச்சியில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் சுதந்திர தினம் மட்டுமின்றி, தங்களது மோட்டார்சைக்கிள் மற்றும் தங்களது சுதந்திரமான பயணங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அனைவருடன் பகிர்ந்து கொண்டனர்.

10. மலைகளின் அரசி...
மறுநாள் காலை, வெண்மேக போர்வையை உடுத்தி நின்ற, மலைகளின் அரசியின் அழகை ரசித்தவாறு பயணம் தொடர்ந்தது. நீலகிரி மலையில் உள்ள பைகாராவை இலக்காக கொண்டு பயணம் துவங்கியது. ஓர் உண்மையான சுதந்திர காற்றை அனுபவித்தபடி, பைக் குழுவினர் பைகாராவுக்கு அணிவகுத்தனர்.

11. மோட்டார்சைக்கிள்களுக்கான எக்ஸாம்...
கல்ஹட்டி மலையின் 36 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லும்போது, உரிமையாளர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் உண்மையான திறனை அறிந்துகொள்ளும் பரீட்சையாகவே அமைந்தது.

12.படகு குழாம்
பைகாராவிலுள்ள படகு குழாமை அடைந்தவுடன், பைக் உரிமையாளர்களுக்கு சுடச்சுட சமோசாவும், தேநீரும் வழங்கப்பட்டது. பயணக் களைப்பை போக்கி, உற்சாகத்தை தந்தது அந்த சரியான சமயத்தில் தந்த தேநீரும், சமோசாவும். அங்கு சிறிது நேரம் செலவிட்ட பின், கூடலூர் நோக்கி மோட்டார்சைக்கிள்கள் பயணத்தை துவங்கின். அதன்பிறகு முதுமலை சரணாலயம் வழியாக மீண்டும் வைல்டு இன் ரிசார்ட்டை அடைந்தனர். அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

13.மறக்க முடியாத அனுபவம்...
மதிய உணவு முடிந்த கையோடு, மீண்டும் பெங்களூர் நோக்கி பயணக் குழுவினர் திரும்பினர். வழியில் கனமழை இடையூறு செய்த போதிலும், அதனையும் ஒரு புதுவிதமான அனுபவமாக எடுத்துக் கொண்டு பெங்களூர் திரும்பினர். சுதந்திர தினத்தில் இது ஒரு உண்மையான சுதந்திரத்தை அளித்த பயணமாகவே அமைந்ததாக பலர் கூறியதோடு, இது நீண்ட நாட்கள் மறக்க முடியாத அனுபவமாகவும் கூறினர்.


Click it and Unblock the Notifications








