பைக்கில் மணிக்கு 130 கிமீ வேகம்... நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த வாலிபரின் வீடியோ வைரல்...
பைக்கில் மணிக்கு 130 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் பயணித்து கொண்டிருந்த வாலிபர், நாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரை பணயம் வைத்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும் என சொல்லவே முடியாது. திடீர் திடீரென ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வாகனங்களின் குறுக்கே வரும். எனவே இந்திய சாலைகள் எவராலும் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளன.

அத்துடன் உலகின் அபாயகரமான சாலைகளில் ஒன்று எனவும் இந்திய சாலைகள் மிக மோசமான பெயரை சம்பாதித்து வைத்துள்ளன. இது போதாதென்று சாலைகளின் தரம் வேறு இங்கு மிகவும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது.

இத்தகைய காரணங்களால் இந்திய சாலைகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான விபத்துக்கள் அரங்கேறி கொண்டுள்ளன. இதில், பல விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சாலை விபத்துக்கள் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய சாலைகள் எவ்வளவு மோசமானது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்றை TBC MotoVlog யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ரைடர் ஒருவர் ஹோண்டா சிபிஆர்250ஆர் (Honda CBR250R) மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கிறார்.

அவர் பயணம் செய்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீடியோவில் நம்மால் அதனை காண முடிகிறது. ஆனால் சாலை காலியாக இருந்ததால் அவர் அதிவேகத்தில் பயணம் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் மணிக்கு 130 கிலோ மீட்டர்களுக்கும் மேற்பட்ட வேகத்தில் பறந்து கொண்டிருந்தார்.

அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ரைடர், சாலையின் குறுக்கே வந்த நாயை கவனித்து விட்டார். அத்துடன் உடனடியாக பிரேக்கை அப்ளை செய்தார். நல்ல வேளையாக உடனே பைக்கின் வேகம் குறைந்து விட்டது.

அத்துடன் நாயும் வந்த வழியிலேயே திரும்பி ஓடி விட்டது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ரைடர் ஓட்டிய ஹோண்டா சிபிஆர்250ஆர் மிகவும் பழைய மாடல் ஆகும். அனேகமாக 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்கலாம்.

இதில், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS - Anti-lock Braking System) வேறு இல்லை. இது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் வாகன ஓட்டிகளை காப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் ஏபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிஎஸ் இல்லாத சூழ்நிலையிலும் கூட அந்த ரைடர் பதற்றம் அடையாமல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒரு வேளை நாய் மீது பைக் மோதியிருந்தால், அந்த ரைடர் தூக்கி வீசப்பட்டிருப்பார். பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடும்.

ஆனால் அந்த ரைடர் துரிதமாகவும், சமயோசிதமாகவும் யோசித்ததால் அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இது தொடர்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஹோண்டா சிபிஆர்250ஆர் சிறப்பான டூரிங் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளில் இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் ஒருவர் கட்டாயமாக வேக வரைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியாவில் வாகனங்களை இயக்கும்போது ஒரு சில விஷயங்களை வாகன ஓட்டிகள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இதில், நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் பயணிக்க கூடாது என்பது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் கால்நடைகள் மட்டுமல்லாது பாதசாரிகள் கூட திடீரென குறுக்கே வரலாம். அப்போது அதிக வேகத்தில் பயணித்து கொண்டிருந்தால் உடனே பிரேக் பிடித்து அவர்களை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமாக செயலாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








