காவல்துறையினரின் அடாவடியால் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக பலியான பெண்..!
வாகன தணிக்கையின் போது காவலர்கள் அடாவடியாக செயல்பட்டதால் கணவர் முன்னிலையில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அது குறித்த தகவல்களை காணலாம்.
கடந்த ஆண்டு சென்னை கே. கே.நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காவல்துறையினரால் ஒரு துயர உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை கே. கே.நகர் 80 அடி சாலையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தும் முயற்சியில் திடீரென அவர்களை அடிக்கப் பாய்ந்தனர்.

இந்த சம்பவத்தால் வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் பயந்து அவர் நிலைதடுமாறி செண்டர் மீடியனில் விழுந்தார், அதில் இருந்த கூர்மையான கம்பியில் விழுந்ததில் குடல் சரிந்து அவர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் அராஜகமாக செயல்பட்டதாலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார். அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்திய மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுவது இருசக்கர வாகனங்களே, ஆயினும் அதிகமாக காவல்துறையினரால் பாதிக்கப்படுவதும் இருசக்கர வாகன ஓட்டிகளே. இவர்களே காவல்துறையினரின் அடாவடிக்கு இலக்காக மாறிவிடுகின்றனர்.

வாகனத்தை நிறுத்தும் போது சாவியை எடுத்துக்கொள்வது, வாகன ஓட்டிகளை லத்தியால் அடித்து வாகனத்தை நிறுத்தச் செய்வது, என இவர்களின் அடாவடி சொல்லிமாளாது.

இதைப் போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட சட்டத்தில் இடமில்லை என்றாலும் அதிகாரப் போர்வையில் செயல்படுவதால் அப்பாவி இருசக்கர வாகன ஓட்டிகள் தினந்தோறும் பாதிப்படைந்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பது, மரியாதை குறைவான சொற்களை பயன்படுத்துவது என பெரும்பாலானவர்கள் போக்குவரத்து காவல்துறையினரின் இன்னல்களுக்கு ஆளாகாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

காவல்துறையினரால் ஏற்படும் இன்னல்களில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் போது தான் காவல்துறையினர் செய்யும் அராஜககங்கள் வெளியில் தெரிகின்றன.

கடந்த ஆண்டு கே.கே.நகரில் காவல்துறையினரின் அராஜகத்திற்கு இளைஞர் இலக்காகி குடல் சரிந்து உயிரிழந்ததைப்போல தற்போதும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆட்டோ நகர் பகுதியில் உள்ள ஒரு செக் போஸ்டில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் தன்னுடைய மனைவியுடன் வந்து கொண்டிருந்தார், இந்த பைக்கை நிறுத்தக்கூறி திடீரென சாலையின் நடுவே பாய்ந்து அந்த பைக் சாவியை எடுத்தார் காவலர் ஒருவர்.

காவல்துறையினரின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் பயத்தில் நிலைதடுமாறியதில் தன்னுடைய மனைவியுடன் கீழே விழுந்தார்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி அருகே வந்துகொண்டிருந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணவர் முன்னிலையிலேயே துடிதுடிக்க இறந்தார்.

வாகனத்தை ஓட்டிவந்த அந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் கூட்டமாக திரண்டு சம்பவத்திற்கு காராணமான காவல்துறையினரை அடித்து நொறுக்கினர். அங்கு சாலைமறியலும் நடத்தப்பட்டது.

ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தின் சாவியை திடீரென எடுத்தால் அதன் இஞ்சின் இயக்கம் திடீரென நிறுத்தப்படும், இதில் பயத்தின் காரணமாக ஓட்டுநரால் சரிவர பிரேக்கை இயக்கமுடியாமல் போய்விடுகிறது. இது சில நேரம் விபரீதங்களிலும் முடிந்து விடுகிறது.

இந்தியா முழுவதுமே போக்குவரத்து காவல்துறையினர் இதைப்போன்ற ஈவு இரக்கமற்ற செயல்களில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இவர்களின் அடாவடிக்கு இலக்காகி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கு சமயம் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதனை இங்கு காணலாம்..

- முதலில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினரை கண்டு அச்சம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- அடுத்து வாகன தணிக்கையில் ஈடுபடும் பகுதியை மெதுவாக கடந்து செல்லலாம்.
- காவல்துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தால் மெதுவாக சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் சான்றுகளை காட்டலாம்.
- இந்த நேரத்தில் முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியவை விதிமுறைகளே.. உதாரணமாக உங்களுடைய வாகன சான்றுகளை உதவி ஆய்வாளருக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் சோதிக்க விதிமுறை கிடையாது.
- அதே போல உதவி ஆய்வாளருக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் 100 ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கவும் முடியாது.
- சாலையில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென காவல்துறையினர் உங்கள் வாகனத்தை நிறுத்த உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (இந்த தீர்ப்பின் நகலை வேண்டுமானால் அவர்களுக்கு காட்டலாம்)


என்றாலும் அலுவலகம், கல்லூரி, உள்ளிட்ட முக்கிய வேலைகளுக்காக பயணித்துக்கொண்டிருக்கும் அப்பாவி பொதுமக்களிடம் அடாவடித்தனம் காட்டாமல் காவல்துறையினர் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் இதைப் போன்ற துயர சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்பாகும்..
காவல்துறையினரின் அடாவடியால் கணவன் கண்முன்னிலையில் மனைவி பலியானதை காட்டும் வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணலாம்.


Click it and Unblock the Notifications








