சாட்டையை கையில் எடுத்த போலீஸ்! இனி இது இல்லாம டூவீலரை ஸ்டார்ட் கூட பண்ணீராதீங்க! வளச்சு வளச்சு பிடிக்க போறாங்க
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாங்களாக முன்வந்து ஹெல்மெட்களை அணிய வேண்டும். ஆனால் நிறைய பேர் அப்படி செய்வது கிடையாது. எவ்வளவுதான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும் கூட, ஹெல்மெட் அணிவதில் பலர் விருப்பம் காட்டுவதில்லை. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் உணராததுதான் இதற்கு காரணம். நமக்கு எதுவும் நடக்காது என்ற அலட்சியமும் கூட இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இதை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஹெல்மெட் விதிமுறையை அரசு தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் (Visakhapatnam) நகரில் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை போக்குவரத்து கமிஷனர் ராஜ ரத்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களது டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதற்காக விசாகப்பட்டிணம் நகரில், அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம். இதற்காக இவ்வளவு கடுமையான நடவடிக்கை தேவையா? என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

ஏனெனில் நடவடிக்கைகள் கடுமையாக இல்லாத காரணத்தால்தான், நிறைய பேர் விதிமுறைகளை மீறுகின்றனர். சாலை போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
இதன் காரணமாகவே வாகன ஓட்டிகள் நிறைய பேர் அலட்சியமாக செயல்படுகின்றனர். எனவே கடுமையான நடவடிக்கைகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வரவேற்கிறது. ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யும்போது, தலையில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 70 சதவீதம் வரை குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை இது 42 சதவீதம் வரை குறைப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய தொலைவு என்றாலும் கூட, அலட்சியம் காட்டாமல், ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்யுங்கள். இது சாலை விபத்துக்களில் படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.
அத்துடன் வீணாக அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. விசாகப்பட்டிணம் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பகுதியை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்வது நன்மை பயக்கும். ஹெல்மெட் விதிமுறையுடன் சேர்த்து, அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்து விட முடியும்.


Click it and Unblock the Notifications








