விபத்தில் சிக்கியது யார்னு தெரியாமயே உதவிய இளைஞர்கள்! சரியானதும் வாழ்க்கைல மறக்க முடியாத பரிசை குடுத்துட்டாரு!
இந்தியாவில் சாலை விபத்துக்களில் (Road Accidents) சிக்கியவர்களை காப்பாற்ற பெரும்பாலானோர் முன்வருவதில்லை. கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியது வரும் என்ற அச்சத்தில்தான், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்ற பலரும் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை துன்புறுத்த கூடாது என அரசும், நீதிமன்றமும் பல முறை உத்தரவிட்டு விட்டன. அத்துடன் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டங்களும் கூட அறிவிக்கப்படுகின்றன. ஆனால் இன்னமும் மக்கள் மத்தியில் அச்சம் விலகவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.
இருப்பினும் ஒரு சிலர் தைரியமாக முன்வந்து உதவிகளை செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களை கடவுளே அனுப்பி வைத்ததாக நாம் கருதலாம். அந்த வகையில் கடவுளால் அனுப்பப்பட்ட 2 தேவ தூதர்கள், தற்போது நாடு முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. கிரிக்கெட் பிடிக்காது என கூறுபவர்களுக்கு கூட, ரிஷப் பண்ட்டை நிச்சயமாக தெரியும். இவர் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் பயங்கரமான கார் விபத்து (Car Crash) ஒன்றில் சிக்கினார். உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் இந்த விபத்து நடைபெற்றது.
இந்த சாலை விபத்து நிகழ்ந்தபோது, ரஜத் குமார் மற்றும் நிஷூ குமார் என்ற 2 பேர்தான், ரிஷப் பண்ட்டை காப்பாற்றினர். இவர்கள் இருவரும் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் ஆவர். உண்மையில் இவர்கள் இருவருக்கும் ரிஷப் பண்ட் யாரென்றே தெரியாது.

சாலை விபத்தில் சிக்கிய யாரோ ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணத்தில்தான், ரிஷப் பண்ட்டை காப்பாற்றியுள்ளனர். ரிஷப் பண்ட்டை காருக்கு வெளியே இருந்து மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தது இவர்கள்தான். உண்மையில் இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்து விட்டார்.
இதன் காரணமாக இடையில் சில காலம் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. தற்போது அவர் 'கம்பேக்' கொடுத்து அமர்க்களப்படுத்தி கொண்டுள்ளார் என்பது தனிக்கதை. இதற்கிடையே ரஜத் குமார் மற்றும் நிஷூ குமார் ஆகிய இருவரும் செய்த உதவியை, ரிஷப் பண்ட் மறக்கவில்லை.
தன்னுடைய உயிரை காப்பாற்றிய அவர்கள் இருவருக்கும், ரிஷப் பண்ட் தற்போது ஸ்கூட்டர்களை (Scooters) பரிசாக வழங்கியுள்ளார். அது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள ஸ்கூட்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரிஷப் பண்ட்டிடம் இருந்து கிடைத்த இந்த பரிசை, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலை விபத்தக்களில் சிக்கியவர்களுக்கு எதைப்பற்றியும் யோசிக்காமல் உதவி செய்ய வேண்டும் என்ற பாடத்தை, ரஜத் குமார் மற்றும் நிஷூ குமார் ஆகிய இருவரும், அனைவருக்கும் கற்று கொடுத்துள்ளனர். உண்மையில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது ஆகும். 'கோல்டன் ஹவர்' என குறிப்பிடப்படும் நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்தால், சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நம்மால் வெகுவாக குறைக்க முடியும். எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








