ஐபிஎல் சம்பளத்தின் மூலம் சொகுசுக் கார் கனவை நனவாக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்..!
ஐபிஎல் தொடருக்காக பெற்ற சம்பளத்தை கொண்டு சொகுசுக் கார் வாங்கியுள்ளார் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர். அது குறித்த தகவல்களை காணலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக தான் பெற்ற சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதியை கொண்டு மெர்சிடிஸ் சொகுசுக் கார் வாங்கியுள்ளார் டெல்லி டேர் டெவில்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரிஷாப் பண்ட்.

19 வயதே ஆன இளம் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷாப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியை சேர்ந்தவர் ஆவார். 2015ல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி 18 பந்துகளிலேயே அரைசதம் அடித்து வியக்க வைத்தவர் ரிஷாப்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் ரிஷாப், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி அணியின் தலைவராக இருந்த கவுதம் காம்பீருக்கு பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

2016 - 17 ரஞ்சி கோப்பைக்கான சீஸனில் மகராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் ரிஷாப். மிகவும் இளம் வயதிலேயே முதல் தர போட்டிகளில் முச்சதம் விளாசிய நான்காவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் இவர்.

கடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரிஷாப்பை, 1.9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இவரின் அட்டகாசமான ஃபார்ம் காரணமாக இந்த முறையும் டெல்லி அணி இவரை தக்க வைத்துள்ளது. இவரின் அடிப்படை விலையில் இருந்து 10 மடங்கு அதிகமான தொகைக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் தான் ஆடியுள்ள 12 போட்டிகளில் 366 ரன்கள் குவித்து அசத்தியுள்ள ரிஷாப், 26.14 ரன்களை சராசரி வைத்துள்ளார்.

19 வயதிலேயே கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்ட ரிஷாப் பண்டின் ஸ்டிரைக் ரேட் 165.61 ஆக உள்ளது. இந்த தொடரில் இவர் 24 சிக்ஸர்கள் பறக்க விட்டுள்ளார்.

கோடிகள் கொட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் பல வீரர்களும் சொகுசுக் கார்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தற்போது ரிஷாப்பும் தன்னுடைய சம்பளத்தை கொண்டு சொகுசுக் கார் ஒன்று வாங்கியுள்ளார்.

தன்னுடைய ஐபிஎல் வருமானத்தை கொண்டு ரிஷாப் பண்ட் தற்போது நீல நிறத்திலான மெர்சிடிஸ் மென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி சொகுசுக்காரை வாங்கியுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1.9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷாப் பண்ட் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் டெல்லி எக்ஸ் ஷொரூம் விலை ரூ. 56 லட்சம். ஆன் ரோடு விலை 66 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்பாக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவியான இந்த பென்ஸ் ஜிஎல்சி காரில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








