ரிஷி கபூர் மரணம்... டெல்லியில் இருக்கும் மகள் லாக்டவுனுக்கு மத்தியில் எப்படி வரப்போகிறார் தெரியுமா?
பிரபல நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்துள்ள நிலையில், டெல்லியில் இருந்து அவரது மகள் மும்பைக்கு வரவுள்ளார்.

பாலிவுட் திரையுலகமே தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்கள் மரணம் அடைந்திருப்பதால், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரான இர்பான் கானின் மரண செய்தி நேற்றுதான் (ஏப்ரல் 29) வெளியாகியிருந்தது. 53 வயதான இர்பான் கான் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இர்பான் கான் மறைவு செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள், ரிஷி கபூரின் மறைவு செய்தி இன்று (ஏப்ரல் 30) வெளியாகியுள்ளது. இர்பான் கானை போலவே, ரிஷி கபூரும் கேன்சருக்கு எதிராக போராடி வந்தார். நேற்று அவரது உடல் நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் ரிஷி கபூர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 67 வயதான ரிஷி கபூர் மும்பையில் உயிரிழந்தார். எனவே ரிஷி கபூரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, அவரது மகள் ரித்திமா கபூர் மும்பைக்கு வர வேண்டியுள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தற்போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்பும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே பஸ், ரயில், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரி போன்ற சரக்கு வாகனங்கள் மட்டுமே சிறப்பு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இதனால் ரித்திமா கபூர் மும்பை வருவதில் நடைமுறையில் ஒரு சில சிக்கல்கள் இருந்தன. 39 வயதாகும் ரித்திமா கபூர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.

தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துள்ள ரித்திமா கபூர், சார்ட்டட் ஃப்ளைட்டில் மும்பைக்கு செல்வதற்கு நேற்று இரவே, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் விமானத்தில் பறப்பதற்கான அனுமதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் மட்டுமே கொடுக்க முடியும் எனக்கூறி அதிகாரிகள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அதற்கு மாற்றாக சாலை மார்க்கமாக மும்பை செல்வதற்கு ரித்திமா கபூர் அனுமதி கேட்டுள்ளார். இதனை உடனடியாக ஏற்று கொண்ட அதிகாரிகள் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாலை மார்க்கமாக மும்பை செல்வதற்கான அனுமதியை உடனடியாக கொடுத்துள்ளனர். டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக மும்பை வர 1,400 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணிக்க வேண்டும்.

1,400 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான நெடுந்தூர பயணம் என்பதால், இதற்கு தோராயமாக 24 மணி நேரம் ஆகும். எனினும் சாலை மார்க்கமாகவே பயணம் செய்து தனது தந்தையின் இறுதி சடங்கில் ரித்திமா கபூர் பங்கேற்கவுள்ளார். ஊரடங்கு காரணமாக தற்போது பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

வீடுகளில் இருந்து தேவை இல்லாமல் வெளியே வருவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பணிகள் இருக்கும் பட்சத்தில், சிறப்பு பாஸ்களை பெற்று சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளலாம். இதன்படிதான் ரித்திமா கபூர் சிறப்பு அனுமதி மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு வரவுள்ளார்.


Click it and Unblock the Notifications