பல ஆயிரம் கோடி ரூபாயில் போடப்பட்ட சாலையில் இப்போ தான் சரியானதை செஞ்சிருக்காங்க - இனி தைரியமாக போகலாம்!!
சாலை விபத்துகள் நம் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாளை திறந்தால் தினந்தோறும் குறைந்தது ஒரு சாலை விபத்தை ஆவது பார்க்க முடிகிறது. இதனால் விபத்துகளினால் நிகழும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சாலை விபத்துகளுக்கு சாலையின் தரம் போதுமான அளவிற்கு இல்லாததே காரணம் என நாம் குற்றஞ்சாட்டி வருகிறோம். ஆனால் உண்மையில், சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம், சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும். இதன் காரணமாக, அதிவேகமாக செல்வது உள்ளிட்டவற்றால் அதிகமாக சாலை விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதலால், வாகன ஓட்டிகளை உன்னிப்பாக கண்காணித்தாலே பாதி சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைத்துவிடலாம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் வழக்கத்தை காட்டிலும் சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள் சுமார் 69% குறைந்துள்ளன.

இதற்கு காரணம் என்னவென்று தெரிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள். வேறொன்றும் இல்லை, நெடுஞ்சாலையில் நிறைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதே ஆகும். இந்த ரிப்போர்ட் ஆனது கடந்த 5 மாதங்களில் எடுக்கப்பட்டது ஆகும். அதாவது, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் வழக்கத்தை விட 2024ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 69% குறைந்துள்ளன.
2024 ஜனவரி - மே வரையிலான இந்த 5 மாத காலக்கட்டத்தில் இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 125 விபத்துகள் பதிவாகி உள்ளன. இந்த 125 விபத்துகளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 167 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், 2023ஆம் ஆண்டில் இதே முதல் 5 மாதங்களில் 288 விபத்துகளில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 301 பேர் காயமடைந்து இருந்தனர். அதாவது, சாலை விபத்துகள் பாதிக்கும் மேல் குறைந்திருப்பதுடன், உயிரிழப்புகள் சுமார் 69% குறைந்துள்ளன.

இந்த பெரிய வித்தியாசங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மட்டும்தான் முழு காரணம் என சொல்லிவிட முடியாது. வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலைதுறை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தி இருந்தது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் முதல் 5 மாதங்களில் ஏப்ரல் மாதத்தில்தான் அதிக விபத்துகள் பதிவாகி உள்ளன.
2024 ஏப்ரலில் 31 விபத்துகளும், 2023 ஏப்ரலில் 61 விபத்துகளும் நடந்துள்ளன. பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் 2023 மே மாதத்தில் சாலை விபத்துகளினால் 29 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 3 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதனை பெங்களூர் மாநகரின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அலோக் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் முக்கியமான விரைவுச்சாலையாக பெங்களூர்- மைசூர் விரைவுச்சாலை விளங்குகிறது. இதனை கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் திறந்து வைத்தார். 4-சக்கர வாகனங்களுக்கு தனியாக மற்றும் 3-சக்கர & 2-சக்கர வாகனங்களுக்கு என தனியாக பாதைகள் இந்த விரைவுச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 2-சக்கர வாகன ஓட்டிகள் முக்கியமான 4-சக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதையில் செல்வதாக விரைவுச்சாலை திறக்கப்பட்ட புதியதில் புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் மட்டுமின்றி, சாலையில் இருந்து மழைநீர் முறையாக வடியவில்லை என்பது உள்பட வேறு சில புகார்களும் எழுந்தன. இதனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த விரைவுச்சாலையில் சாலை விபத்துகள் அதிகமாக பதிவாகின. இது நாளுக்கு நாள் பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததை அடுத்து, பெங்களூர்- மைசூர் விரைவுச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை டிஜிபி அலோக் குமார் அதிரடியாக மேற்கொண்டார். இதன் விளைவாக, கண்காணிப்பு கேமராக்கள் சாலையின் முக்கியமான 5 இடங்களில் பொருத்தப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர்- மைசூர் விரைவுச்சாலை என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்பது போலதான். ஆக, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் நெடுஞ்சாலையில் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைகின்றன. எனவே, இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தால் நாட்டின் சாலை விபத்துகளை வெகுவாக குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications









