வாகன ஓட்டிகளை உறைய வைத்த பெங்களூர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கொலை!
பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கொலை செய்யப்பட்டதற்கு ரோட்ரேஜ்தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் நேற்று முன்தினம் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் காரணங்கள் வெளியாகி உள்ளன.

ஒடிஷாவை சேர்ந்தவர் பிரனாய் மிஷ்ரா. பெங்களூரில் உள்ள அக்சென்ச்சர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, பெங்களூர் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், சிசிடிவி கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில், பிரனாய் மிஷ்ராவை தாக்கி கொலை செய்தது, பிரபல ரவுடிகளான கார்த்திக் மற்றும் அருண் என தெரிய வந்தது.
Recommended Video


இதையடுத்து, இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இதில், கார்த்திக்கை துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் அருண் தலைமறைவாக உள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டிருப்பவதாவது,

நண்பர்களுடன் இரவு விருந்து முடித்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 2.45 மணியளவில் பிரனாய் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, தாவரகெரெ பகுதியை கடக்கும்போது, அந்த பகுதியாக பைக்கில் சென்று கொண்டிருந்த கார்த்திக் மற்றும் அருண் பைக்கின்போது பிரனாய் மிஷ்ராவின் ஆக்டிவா ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாக மோதியதாக தெரிகிறது.

இதில், பைக்கின் பின்புற மட்கார்டு சேதமடைந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அருண் ஆகியோர் மட்கார்டை சரிசெய்து தருவதற்கு ரூ.500 வரை கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பிரனாய் மறுத்ததுடன், தன் மீது தவறு இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அருண் கடுமையாக வாய்தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பிரனாய் மிஷ்ரா காதில் வாங்காமல் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார். கோபத்தின் உச்சிக்கு சென்ற ரவுடிகளான கார்த்திக் மற்றும் அருண் ஆகிய இருவரும் பிரனாய் மிஷ்ராவை விரட்டிச் சென்று மடக்கி உள்ளனர்.

பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரனாய் மிஷ்ராவை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் கடுமையான காயங்களுடன் பிரனாய் உயிருக்கு போராடியுள்ளார்.

பின்னர், அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் பிரனாய் மிஷ்ராவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக சாலையில் நடந்த வாய்த்தகராறு காரணமாக, இளம் மென்பொறியாளர் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது, பெங்களூரில் வாகன ஓட்டிகளிடையே கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது அவசியம். மேலும், தனியாக செல்வதை தவிர்ப்பதும் நல்லது. அத்துடன், மிக நிதானமாக நள்ளிரவு நேரங்களில் வாகனத்தை செலுத்துவதும் இதுபோன்ற பெரும் பிரச்னைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ள உதவும்.


Click it and Unblock the Notifications








