பரபரப்பான சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வேண்டுமென்றே டூவீலர் மீது மோதிய ஆட்டோ டிரைவர்... ஏன் தெரியுமா?
ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வேண்டுமென்றே தனது ஆட்டோவை, இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. சாலைகளில் வாகன ஓட்டிகள் சண்டையிட்டு கொள்வதை நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த வகையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கும் இடையே நடந்த பிரச்னை தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்பதை வீடியோ ஒன்றில் தெளிவாக பதிவாகியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சாலையில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

சில வினாடிகளுக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்த்து கொண்டது போல் தெரிகிறது. இதன்பின் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே திசையில் முன்னோக்கி சென்றதை போல் தெரிகிறது. அப்போது ஆட்டோ ஓட்டுனர் திடீரென தனது ஆட்டோவை, அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார்.

ஆட்டோ ஓட்டுனர் வேண்டுமென்றே செய்த இந்த காரியத்தால், இரு சக்கர வாகன ஓட்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். ஆனால் ஆட்டோ ஓட்டுனரோ எதுவுமே நடக்காதது போல் அங்கிருந்து சென்று விட்டார். எனினும் கீழே விழுந்த இரு சக்கர வாகன ஓட்டியை மீட்பதற்காக, அக்கம் பக்கம் இருந்த சிலர் ஓடி வந்தனர். அந்த இரு சக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த வீடியோ, காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உதவியாக இருந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு 34 வயதாகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுனர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் அவருக்கு கடும் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கூறியபடி சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படுவது என்பது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் ஒரு சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் தவிர்க்கலாம். எந்தவொரு இடத்திற்கு செல்வதாக இருந்தாலும், கொஞ்சம் முன்கூட்டியே கிளம்புங்கள்.

நேரமின்மை காரணமாக ஏற்படும் பதற்றம்தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. அத்துடன் வாகனங்களை ஓட்டும்போது நல்ல மற்றும் அமைதியான மன நிலையில் இருப்பது முக்கியம். இதற்கு நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்கலாம். ஆனால் சாலையில் இருந்து கவனம் சிதறி விடக்கூடாது.

அதேபோல் மற்ற வாகன ஓட்டுனர்களும் மனிதர்கள்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதாவது அவர்கள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே யாராவது சிறிய தவறு செய்து விட்டால் கூட உடனே சண்டைக்கு சென்று விடாதீர்கள். ஒருவேளை மற்ற வாகன ஓட்டிகள் யாரிடமாவது உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு அவர்கள் உங்களை பின் தொடர்ந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்வது நல்லது.


Click it and Unblock the Notifications








