மரண பயத்தை காட்டும் இந்த போட்டோக்களை பார்த்த பிறகும் சாலை விதிகளை மீறுவீங்க? கண்டிப்பா மாட்டீங்க
19 வயது மட்டுமே நிரம்பிய இளைஞர் ஒருவர் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் இனி நீங்கள் ஒருபோதும் சாலை விதிகளை மீற மாட்டீர்கள்.

சாலை பாதுகாப்பிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது மகத்தான பாராட்டுக்களை பெற்று வருகிறார். அவரது பெயர் ஹபீஷ் சஜீவ். புகைப்பட கலை மீது தீராக்காதல் கொண்ட ஹபீஷ் சஜீவ்விற்கு தற்போது 19 வயது மட்டுமே ஆகிறது. போட்டோகிராபி மீதான தனது காதல், திறமையை சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளார் ஹபீஷ் சஜீவ்.

இதற்காகதான் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தை நமது நாட்டில் யாருமே அவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. அதிகாரிகள், பொதுமக்கள் என யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. வாகன ஓட்டிகளை எடுத்து கொண்டால், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிய மறுப்பது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுவே அதிகாரிகள் என எடுத்து கொண்டால், வாகன ஓட்டிகளுக்கு தேவையான தரமான சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை அவர்கள் ஏற்படுத்தி தருவதில்லை. என்றாலும் சமீப காலமாக மட்டும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு சற்றே மேம்பட்டுள்ளது. இது கொஞ்சம் நமக்கு மனநிறைவை தருகிறது. ஆனாலும் இந்தியா முன்னேற வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

எனவே தங்களின் சொந்த பாதுகாப்பிற்காக வாகன ஓட்டிகள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைதான் ஹபீஷ் சஜீவ்வும் செய்து வருகிறார். ஹபீஷ் சஜீவ் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

அவரின் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் மிகவும் அபாரமாக எடுக்கப்பட்டுள்ளன. அவரது ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு மெசேஜை நமக்கு சொல்கிறது. பைக்கில் அமர்ந்திருக்கும் பெண்ணின் துப்பட்டா சக்கரத்தில் சிக்கி கொண்டுள்ள புகைப்படம் அதற்கு ஒரு உதாரணம். துப்பட்டாவுடன் டூவீலரில் பயணிக்கும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதையும் இந்த புகைப்படம் நமக்கு சொல்கிறது. கார் கதவை திடீரென திறந்ததால் மோட்டார்சைக்கிள் ரைடர் கீழே விழ போகும் புகைப்படம் மற்றொரு உதாரணம். கார் கதவை திறக்கும் முன்பாக ஒருவர் சுற்றுப்புறத்தை உற்று நோக்க வேண்டும் என்ற மெசேஜை இந்த புகைப்படம் சொல்கிறது.

இந்த புகைப்படங்கள் இவ்வளவு துல்லியமாக எடுக்கப்பட்டது எப்படி? என்பது தெரியவில்லை. இது நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. thrikkannan எனும் பெயர் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியாவில் ஒருவர் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை அடிப்படையாக கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை ஹபீஷ் சஜீவ் பதிவேற்றியுள்ளார்.

இதில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிப்பது, குழந்தைகள் மீதான வன்முறை உள்பட பல்வேறு பிரச்னைகளும் அடங்கும். இந்தியாவை பொறுத்தவரை சாலை பாதுகாப்பு தொடர்பாக இன்னும் வலுவான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை.

கிராமங்களில் இன்னும் நிலைமை மிக மோசமாக உள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சாலை பாதுகாப்பு என்றால் என்ன? என்பதே தெரிவதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தனது புகைப்பட கலையை பயன்படுத்தி கொண்டுள்ளார் ஹபீஷ் சஜீவ். அவருக்கு நமது பாராட்டுக்கள்!!


Click it and Unblock the Notifications