மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் காலக்கெடுவை நீட்டித்தது மோடி அரசு... கார் நிறுவனங்கள் ரொம்ப ஹேப்பி...
மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதனால் கார் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சுமார் நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களின் முன் பகுதியிலும் இரண்டு ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

கார்களில் பயணிகளுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டது. இதன்படி புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் கார்களின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே அதிரடியாக அமலுக்கு வந்து விட்டது.

அதே நேரத்தில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகளை வழங்குவது கட்டாயம் என்ற உத்தரவு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த காலக்கெடுதான் தற்போது வரும் டிசம்பர் 31ம் தேதி வரை என சுமார் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்குவதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பேரில் தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அத்துடன் சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. எனவே இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த வரிசையில்தான் கார்களின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை வழங்குவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கார் சாலை விபத்தில் சிக்கினால் பயணிகளின் உயிரை காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு அம்சம் ஏர்பேக்குகள்தான். எனவே ஏர்பேக்குகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களின் முன் பகுதியிலும் 2 ஏர்பேக்குகள் கட்டாயமாக இருக்கும். அதற்கு மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








