டோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது! மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா?
டோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது. இது தொடர்பாக அந்தந்த மாநில போக்குவரத்து துறைகளுக்கு மத்திய அரசு தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் சில சமயங்களில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறைகள் தொடங்கும் மற்றும் முடிவடையும் நாட்களில், டோல்கேட்களை கடப்பது என்பது வாகன ஓட்டிகளுக்கு சவாலான காரியமாக மாறி விடுகிறது.

ஒவ்வொரு வாகனமாக சுங்க கட்டணம் செலுத்தி விட்டு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதன் காரணமாகதான் டோல்கேட்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பாஸ்டேக் (Fastag) திட்டம் கொண்டு வரப்பட்டது.

பாஸ்டேக் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். பாஸ்டேக் மூலமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என மத்திய அரசு கருதுகிறது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. எனவே நாட்டில் உள்ள அனைத்து டோல்கேட்களையும் அதற்கு ஏற்ப மாற்றம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதாவது அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி இந்தியாவில் தற்போது வரை சுமார் 75 சதவீத டோல்கேட்களில் பாஸ்டேக் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சிய 25 சதவீத டோல்கேட்களிலும் இந்த வசதி வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு விடும். அதற்கேற்ப பணிகள் அனைத்தும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலமாக மட்டுமே சுங்க கட்டணத்தை வசூலிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறைக்கு மாறியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனி பாஸ்டேக்கிற்கான தேவை அதிகரிக்கும். எனவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது அனைத்து மாநிலங்களின் போக்குவரத்து துறைகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில், பாஸ்டேக் தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிறக்கப்பட்டுள்ளது.

அதாவது பாஸ்டேக்கை விற்பனை செய்ய அனைத்து ஆர்டிஓ அலுவலக வளாகங்களிலும் இட வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்டேக் மூலமாக மட்டும்தான் சுங்க கட்டணம் செலுத்த முடியுமா? ரொக்கமாக பணம் செலுத்தி விட்டு டோல் பிளாசாவை கடந்து செல்ல முடியாதா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டாலும், நீங்கள் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ரொக்கமாக பணம் செலுத்தி விட்டு செல்ல வேண்டும் என்றால் மிக நீண்ட நேரம் ஆகும். அது ஏன்? என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம். ஒவ்வொரு டோல்கேட்டின் இருபுறமும் (வருவதற்கு, செல்வதற்கு) கேஷ் பேமெண்டிற்காக தலா ஒரு லேன் மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்த ஒரு லேனில் மட்டுமே ரொக்கமாக பணம் செலுத்த முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்பட்டு விடும். எனவே ஒரே ஒரு லேன் மட்டும்தான் என்பதால், நீங்கள் பணம் செலுத்தி விட்டு டோல்கேட்டை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகலாம். எனவே பாஸ்டேக்கிற்கு மாறுவதுதான் உங்களுக்கு நல்ல வழியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications