இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இதைதான் செய்ய போகிறோம்... சபதம் போட்ட மோடியின் அமைச்சர்...
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறோம்? என்பதை மோடியின் அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கார் அல்லது டூவீலர் என குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வாகனமாவது இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்போது உருவாகி விட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 2.56 கோடி வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தன. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 84 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட இந்த சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரித்திருக்க கூடும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமேதான் உள்ளது.

குறிப்பாக லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதற்கு ஏற்ற வகையில், இந்தியா முழுக்க தரமான தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது என்பது அவசியமாகிறது.

நாட்டின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி. இம்முறையும் அவருக்கு அதே துறைதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை நிதின் கட்கரி தொடங்கியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 60 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றுவதில் நிதின் கட்கரி தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நடப்பு நிதியாண்டில் 12,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 10,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது ஒரு நாளைக்கு சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் படி பணிகள் வேகப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று (ஜூன் 4ம் தேதி) நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவல்களை தெரிவித்தார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுவாக்குவதில் பாஜக அரசு கூடுதல் கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மாலை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








