நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு - வட இந்திய ஸ்டைலில் கோவையில் கார் வழிப்பறி! உங்களுக்கு நடக்கும்போது இதை பண்ணுங்க
வழிப்பறிகள் (Robbery), நம் இந்தியாவில் காலம் தொட்டு நீண்ட பல வருடங்களாக நடைபெறும் ஒன்று. அதாவது, பொது இடத்தில் செல்லும் ஒருவரை ஆயுதத்தை காட்டி மிரட்டி அவரிடம் இருக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்கு பெயர் தான் வழிப்பறி ஆகும். சாலைகள், வாகனங்கள் எல்லாம் மாறிவிட்டன. திருடர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கூட மாறிவிட்டன. ஆனால், வழிப்பறி கான்செப்ட் மட்டும் இன்னும் மாறாமல் உள்ளது. நம் தமிழ்நாட்டில் வழிப்பறி சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயம்புத்தூரில் ஓர் பரபரப்பான நெடுஞ்சாலையில் வழிப்பறி முயற்சி நடந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதனால், இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இருப்பினும், இந்த சம்பவத்தில் வழிப்பறி முயற்சிக்கு உள்ளான கார் டிரைவர் விவேகமாக செயல்பட்டு திருடர்களிடம் சிக்காமல் காரை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.

இரவு நேரங்களில் காரில் பயணம் செய்வதால், நிறைய நேரங்களையும், பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என பலர் நினைக்கின்றனர். ஏனெனில், இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்றும், இதனால் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, காரில் மைலேஜையும் அதிகம் பெறலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இதேபோன்றுதான் மற்றவர்களும் நினைப்பார்கள், இதனால் இரவு நேரத்திலும் வாகனங்கள் அதிகமாக இருக்கும் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இரவு நேரத்தில் விபத்துகளும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில், இருள் எங்கு உள்ளதோ அங்கு ஆபத்துகளும் மறைந்திருக்கும். இதனை உணராமல் இரவு கார் பயணங்களை மேற்கொள்பவர்களில் ஒரு க்ரூப் சமீபத்தில் பெங்களூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றுள்ளது. இந்த க்ரூப்பில், 5 கேரள இளைஞர்கள் இருந்தனர்.

இவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றதும் கேரளாவை சேர்ந்தவர்களே. இந்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் நடந்துள்ளதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கோவை போலீசார் வீடியோவை வைத்து கைது செய்துள்ளனர். அஸ்லாம், சித்திக், சார்ல்ஸ் ரெஜி மற்றும் இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் பெங்களூரில் கம்யூட்டர்களை வாங்கிவிட்டு கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
ஜூன் 14ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கார் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் மற்றொரு காரில் வந்து இவர்களது காரை வழிமறித்து தாக்கியது. வழிமறித்த காரில் இருந்து இறங்கி வந்த இருவர் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் இந்த இளைஞர்களின் காரை தாக்க ஆரம்பித்தனர். இதில் மிகவும் பயந்துப்போன இந்த இளைஞர்கள் உதவிக்கு ஆட்களை கத்தி அழைப்பதை வீடியோவில் காணலாம்.

திருடர்கள் தாக்கியதில் இந்த இளைஞர்களின் காரின் கண்ணாடிகள் உடைந்தன. இதில் மிகவும் பதறிப்போன இளைஞர்கள், எப்படியாவது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என பயந்துக் கொண்டிருந்த நேரத்திலும் துரிதமாக செயல்பட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் செய்தது என்னவென்றால், திருடர்கள் ஒவ்வொருவராக காரில் இருந்து இறங்கிவந்து கொண்டிருந்ததை பார்த்ததும், தங்களது காரை பின்னோக்கி கொஞ்ச தூரம் கொண்டு சென்றனர்.
திருடர்களும் துரத்திக் கொண்டு வந்த நிலையில், திடீரென காரை நிறுத்தி முன்னோக்கி டாப் கியரில் செல்ல ஆரம்பித்தனர். திருடர்கள் வந்த கார் குறுக்கே நின்ற போதிலும் அதற்கிடைப்பட்ட சந்தில் புகுந்து சென்றனர். திருடர்களின் கார் கதவுகள் திறந்து கிடந்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல், கார் கதவுகளை இளைஞர்கள் உடைத்துக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட கேரளா, பாலக்காடை சேர்ந்த நால்வரில் இருவரை உடனடியாக கைது செய்த கோவை போலீசார், தலைமறைவாகிய மீதி இருவரையும் கைது செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெடுஞ்சாலை பயணங்கள் எந்த அளவிற்கு சொகுசானது மற்றும் விரைவானதோ அந்த அளவிற்கு ஆபத்துகளையும் தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இவ்வாறான வழிப்பறி சம்பவங்கள் நம் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவிட்டது. வட இந்தியாவில்தான் பரவலாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









