ஜப்பானில் பொது பயன்பாட்டுக்கு வருகிறது ரோபோ டாக்சி!
உலகிலேயே முதல்முறையாக, ஜப்பானில் டிரைவரில்லாமல் இயங்கும் வாடகை கார்கள் சோதனை அடிப்படையில் விரைவில் பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது டிரைவரில்லாமல் இயங்கும் கார் ஆராய்ச்சியில் ஓர் புதிய மைல்கல்லை எட்டும் முயற்சியாக கருதப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூட்டு தயாரிப்பு
தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் ZMP நிறுவனமும், மொபைல் இன்டர்நெட் சேவை நிறுவனமான DeNa ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய ரோபோ டாக்சியை உருவாக்கி, அறிமுகம் செய்ய இருக்கின்றன.

ஸ்மார்ட் நகரம்
ஜப்பான் தலைநகரம் டோக்கியோ அருகில் உள்ள கடற்கரை நகரமான பியூஜிசவாவில்தான் இந்த ரோபோ டாக்சிகள் பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. சாதாரண பொது பயன்பாட்டுச் சாலைகளிலும் இந்த ரோபோ டாக்சிகள் இயக்கப்பட இருப்பதே விசேஷமான தகவல்.

குடியிருப்புவாசிகளுக்கு பயன்
பியூஜிசவா நகரில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை, அருகில் இருக்கும் வியாபார தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த ரோபோ டாக்சி பயன்படுத்தப்பட உள்ளன. சுமார் 3 கிமீ பரபரப்பளவுக்கு மட்டுமே இந்த ரோபோ டாக்சி இயக்கப்படும்.

பாதுகாப்பு
மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரோபோ டாக்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், முன் எச்சரிக்கையாக ரோபோ டாக்சியின் இயக்கத்தை ஓட்டுனர் ஒருவரும் கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோக்கம்
வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது, பார்வையாளர்களை மைதானங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த ரோபோ டாக்சிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண வருபவர்களுக்கு ஓர் புதுமையான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்கள்
ஜப்பானில் வயதான ஓட்டுனர்களால் மிக மோசமான விபத்துக்கள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ரோபோ டாக்சிகள் மூலமாக அந்த விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று சாலை போக்குவரத்து துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கணிசமான அளவு
கடந்த 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 75 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் எண்ணிக்கை 4.25 மில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த எண்ணிக்கை 5 மில்லியனை கடந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், அங்கு வாகனங்களை இயக்குவதற்கு வயதான ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனை ஓட்டம்
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பியூஜிசவா நகரில் இந்த ரோபோ டாக்சிகள் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications