ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் வாடகையே இத்தன லட்சமா! பணத்தாசையில் ஆடிய ஓனருக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்!
கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று விடும். விதிமுறை மீறல்களுக்காக பாரபட்சமின்றி அபராதம் விதிப்பதுதான் இதற்கு காரணம். இந்த வரிசையில் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் ஒன்று, கேரள மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது 12.04 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
வரி ஏய்ப்பில் (Tax Evasion) ஈடுபட்டதுதான் இதற்கு காரணம். இது கொச்சி (Kochi) நகரில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த நிறுவனம் கார்களை வாடகைக்கு வழங்கி வருகிறது. அபராதம் விதிக்கப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் கூட, வாடகைக்கு வழங்கப்படுவதுதான்.

தற்போதெல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாடகைக்கு எடுத்து, திருமண ஊர்வலங்கள் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றை நடத்துவது ஒரு ஃபேஷனாக மாறி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு குடும்பத்தினர் ஒரு நாளுக்கு 2 லட்ச ரூபாய் செலுத்தி வாடகைக்கு எடுத்திருந்தபோதுதான், இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், அதிகாரிகளின் கண்களில் சிக்கியது.
விசாரணையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் கேரள மாநிலத்தில் முறையாக வரி செலுத்தாமல், இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இந்த கார் புதுச்சேரியில் (Pondicherry) பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு போலி முகவரி கொடுத்து காரை பதிவு செய்து, கேரளாவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கேரளாவில் வரி செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர் வேண்டுமென்றே இதை செய்துள்ளார். இது விதிமுறை மீறல் என்றாலும் கூட, கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் தொடர்ச்சியாக இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள்!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சாலை வரிகள் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு சில மாநிலங்களில் அதிகமாகவும், ஒரு சில மாநிலங்களில் குறைவாகவும் உள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரையில் வரி குறைவு. இதன் காரணமாகவே வெளி மாநிலத்தை சேர்ந்த பலர், புதுச்சேரியில் தங்கள் சொகுசு கார்களை பதிவு செய்கின்றனர்.
இதற்காக புதுச்சேரியில் வசிப்பதை போல், போலி முகவரியை கொடுக்கின்றனர். இதன் மூலம் வரியாக செலுத்த வேண்டிய பணத்தை அவர்கள் சேமிக்கின்றனர். கடந்த காலங்களில் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர், இந்த வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது இங்கே நினைவு கூறதக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களை விதிமுறைப்படி பதிவு செய்து பயன்படுத்துவதுதான் சரியானது. இல்லாவிட்டால் இது போன்ற பிரச்னைகளில் சிக்கி, பெரும் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். இது பிற்காலங்களில் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படுவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








